search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதையில் வாகனம் ஓட்டியவர் புளியமரத்தில் மோதி சாவு - திருச்சி அருகே சம்பவம்
    X

    போதையில் வாகனம் ஓட்டியவர் புளியமரத்தில் மோதி சாவு - திருச்சி அருகே சம்பவம்

    • மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய அன்பழகன் மாலையில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார்
    • பின்னர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய அன்பழகனுக்கு போதை தலைக்கேறியது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய அன்பழகன் மாலையில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய அன்பழகனுக்கு போதை தலைக்கேறியது. இருந்தபோதிலும் நண்பர்களிடம் கூறிவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் தடுமாறியவாறு வீட்டுக்கு புறப்பட்டார். ஒருகட்டத்தில் பாதையே தெரியாத அளவுக்கு வாகனம் ஓட்டிய அன்பழகன், சிறுகனூர்-தச்சங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    மணல் நிறைந்த அந்த சாலையில் சில மீட்டர் தூரம் சென்ற அவர் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    ஆனால் அந்த வழியாக யாரும் வராததால் உதவி கிடைக்காமல் நீண்ட நேரமாக போராடிய அன்பழகன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் அன்பழகனை தேடி அலைந்தனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தது அன்பழகன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அன்பழகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×