search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை
    X

    தளி அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

    • பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    ஒசூர் அருகே உள்ள தளியில் ஜெயந்தி காலனி அருகே பிரபல ரடிவுயான தளி சதீஷ் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தளி போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர் யார்? என்ற விவரம் குறித்து விசாரித்தனர்.

    இதில் தளி அருகே குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (வயது34) என்பவர் தெரியவந்தது.

    பிரபல ரவுடியான இவர் கஞ்சா கடத்தல், கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

    வீட்டில் இருந்த சதீஷை நேற்று இரவு சில மர்ம நபர்கள் மதுகுடிப்பதற்காக ஜெயந்தி காலனியில் உள்ள எஸ்டேட்டிற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

    பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர். இதில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வாங்கி கொண்டு அவர் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சதீஷின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன சதீஷ் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கில் சிக்கியுள்ள சதீஷை யாராவது பழிவாங்குதற்காக வெட்டி கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி கொலை செய்துள்ளனரா? அல்லது குடிபோதை தகராறில் நண்பர் வெட்டி கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×