search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் வருகிற 3-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
    X

    மாநாட்டுக்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பந்தல்.


    நாமக்கல்லில் வருகிற 3-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    நாமக்கல்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது.

    இம்மாநாட்டினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநாடு பந்தல் முன்பு சென்னை ரிப்பன் கட்டிடம் வடிவில் முகப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

    காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் ஆ.ராசா எம்.பி. மற்றும் தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன்சுல்தானா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    மதியம் 12 மணி அளவில் உணவு இடைவெளிக்கு பிறகு வரலாற்று சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார்.

    மாலை 4 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறுகிறார்.

    இம்மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×