search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்க்கார்பதியில் மின் உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிப்பு
    X

    சர்க்கார்பதியில் மின் உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிப்பு

    • பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    • 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி

    பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    9 அணைகள் திட்டத்தில் இருந்தாலும் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் இருந்து மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

    பி.ஏ.பி திட்டத்தில் அதிக கொள்ளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை நிரம்பிவிட்டால் ஓராண்டுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்காது.

    திருமூர்த்தி அணைக்கும், ஆழியாறு அணைக்கும் பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணை வழியாக தண்ணீர் வழங்கப்படும்.

    திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதால் அந்த அணைக்கு தேவையான தண்ணீர் பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படுகிறது. இதற்கு 39.3 கி.மீ நீளம் உடைய காண்டூர் கால்வாய் பயன்படுகிறது. காண்டூர் கால்வாயில் அதிக பட்சமாக 1000 கன அடிவரை தண்ணீர் கொண்டு செல்லமுடியும்.

    கடந்த மே மாத இறுதியில் இருந்து காண்டூர்கால்வாயில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்ததால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லமுடியவில்லை.

    இந்நிலையில், கடந்த புதன்கிழமை காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை அடைகிறது.

    சர்க்கார்பதி மின் உற்பத்திநிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு காண்டூர்கால்வாயில் செல்லும் தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைகிறது. கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை 850 கன அடியாக உயர்த்தப்பட்டதால் 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    Next Story
    ×