search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய மருத்துவ ஆணையம் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    தேசிய மருத்துவ ஆணையம் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை
    • மருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் கூறி இருக்கிறார்.

    அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காத பட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமானமருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.

    மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×