search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Medical Commission"

    • கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.
    • தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.

    சென்னை:

    தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும் கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
    • மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி, மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளையும் ஆய்வு செய்த தேசிய மருத்துவ கவுன்சில் சில குறைபாடுகளை கண்டுபிடித்தது. இதையடுத்து இந்த 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

    இதனால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, எந்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகாது. ரத்து செய்யப்படும் அளவுக்கு அரசு நடந்து கொள்ளாது என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை தயார் செய்து தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் குழு டெல்லி சென்று அறிக்கை கொடுத்தது.

    அதன் பேரில் டெல்லி மருத்துவ குழுவினர் மீண்டும் தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து சென்றனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டையில் இன்று இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

    ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி, அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்ட நோட்டீசையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

    திருச்சி மருத்துவ கல்லூரியில் இன்று ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்ததும் அந்த கல்லூரியும் தொடர்ந்து இயங்க அனுமதி கிடைத்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது.
    • மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது.

    சென்னை:

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே புதிதாக மாநகராட்சி சார்பில் ரூபாய் 28 லட்சம் செலவில் அமைக்கப்படும் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளான ஸ்டான்லி, தர்மபுரி உள்பட மூன்று கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகிய சிறு, சிறு குறைகளுக்காக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது போன்று தகவல் வெளியிடப்பட்டது.

    தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தேசிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

    இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது. ரத்தாகும் அ ளவிற்கு தமிழக அரசு விடாது. இன்று அல்லது நாளைக்குள் டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்.

    இந்த விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தாததால் சின்ன விஷயம் பெரிதாக்கப்பட்டு விட்டது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி உள்பட இரண்டு மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்ததும் நேரில் சென்று சந்தித்து பேசுவோம்.

    தமிழக கவர்னர் சிதம்பரம் சிறுமிகள் விஷயத்தில் தவறாக பேசிவிட்டார்.

    அதேபோல், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தும் தவறாக பேசினார். அதுபற்றிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், சின்ன குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த பிரச்சினையை மேற் கொண்டு பேச விரும்பவில்லை.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், கவர்னரும் விமர்சித்திருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீதும், நலனின் மீதும் அக்கறையில்லாதவர்கள் தான் இவ்வாறு விமர்சிப்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள்.
    • 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரமாண்டமாக கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு மற்றும் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் புதுப்பிப்பு இருக்கும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் 29-ந் தேதி வந்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் விதம், ஆய்வகம், மருத்துவ மாணவர்களுக்கான வசதிகள், விடுதி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் நோயாளிக–ளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக அனைத்து மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். தங்கள் தரப்பில் இருந்து அனைத்தையும் திருப்திகரமான முறையில் தேசிய மருத்துவ ஆணைய குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2023-24-ம் ஆண்டுக்கான 100 மருத்துவ இடங்கள் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் பேட்ஜ், 2022-23-ம் ஆண்டு 2-வது பேட்ஜ் என்ற நிலையில் வருகிற 2023-24-வது ஆண்டு 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதுபோல் 2022-23-ம் ஆண்டு அங்கீகாரம் முதல் தடவை புதுப்பிக்கப்பட்டது என்றும், தற்போது 2-வது ஆண்டாக அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் மற்றும் ஏற்கனவே படித்து வருபவர்களுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு கிடைத்துள்ளதால் மருத்துவத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது.
    • 38 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு பிறகு நாடு முழுவதும் 102 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புதுடெல்லி:

    நாடுமுழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு, சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.

    சி.சி.டி.வி. கேமரா பொருத்தாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை இல்லாதது, போதுமான பேராசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் இக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 38 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு பிறகு நாடு முழுவதும் 102 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை பதிவை செயல்படுத்த தவறியதற்காக இக்கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்டாய பயோமெட்ரிக் வருகைக்கான விதிமுறைகளை இந்த கல்லூரிகள் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில் கல்லூரிகளின் பெரும்பாலான ஆசிரிய உறுப்பினர்கள், டீன், முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் கூட பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை குறிப்பிடவில்லை.

    மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்பட்டு அல்லது இணைக்கப்படாமல் இருந்தன. 390-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் பெற உள்ளன. அதில் 256 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

    அதிகாரிகள் 175 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து 25 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 38 விண்ணப்பங்கள் ஏற்கப் படவில்லை.

    102 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 மருத்துவ கல்லூரிகளின் விண்ணப்பங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, திருச்சி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை தேசிய மருத்துவ ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
    • 3 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக ஏராளமான கேள்விகளையும் தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக உயர்ந்துள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதுபோல முதுகலை மருத்துவ படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 107 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் அவற்றின் தரத்தை உறுதிபடுத்துவதில் தேசிய மருத்துவ ஆணையம் தீவிரமாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது.

    ஆனால் இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் விதிமுறைகளை பின்பற்ற தவறி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரிகளின் தரம் குறைந்து இருப்பதாக கருதப்பட்டது. இதேநிலை நீடித்தால் சர்வதேச தர அளவுக்கு இந்திய மருத்துவர்களை உருவாக்குவதில் குறைபாடுகள் ஏற்படும் என்று புகார்கள் எழுந்தன.

    மருத்துவ கல்லூரிகளில் தரம் குறைந்துகொண்டே போனால் உலக அளவில் இந்திய டாக்டர்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டு விடும் என்று கூறப்பட்டது. இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    அந்த ஆணையம் நடத்திய ஆய்வில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இல்லாதது தெரியவந்தது. உள்கட்டமைப்பு வசதிகளும் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வருகையில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாடு முழுவதும் 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

    தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பேராசிரியர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்பட்டது.

    ஆனால் இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார். மருத்துவ கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்ற சிறிய காரணத்துக்காகவே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், 'தமிழகத்தில் 1021 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தகுதியானவர்களை தேர்வு செய்து விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே தமிழகத்தில் 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குனரக குழு டெல்லி சென்றுள்ளது. இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமையில் அந்த குழு டெல்லி சென்றிருக்கிறது.

    இன்று அந்த குழுவினர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக முறையிட உள்ளனர்.

    சென்னை, திருச்சி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை தேசிய மருத்துவ ஆணையம் பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த 3 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக ஏராளமான கேள்விகளையும் தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுள்ளது.

    அந்த கேள்விகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரக குழுவினர் விளக்கம் அளிக்க உள்ளனர். இதற்காக அவர்கள் உரிய ஆவணங்களை தேர்வு செய்து கொண்டு சென்றுள்ளனர். ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் விரிவான பதில் தயார் செய்துள்ளனர்.

    அவற்றையும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க உள்ளனர்.

    இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். நாளை அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

    அதன்பிறகு அவர் டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்வார்.

    அதன்பிறகுதான் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக என்ன முடிவு எட்டப்படும் என்பது தெரியவரும்.

    • மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடு, கண்காணிப்பு கேமராக்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவற்றை காரணமாக சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள டுமிங்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு பதிவு செய்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமக்கு நாமே மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாகவே நடந்துள்ளது. தற்போது சென்னையில் குடிசை பகுதிகளை மையமாக வைத்து மருத்துவ முகாம்கள் நகருகிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை.

    இந்த கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய அமைப்பு அங்கு ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாததை காரணம் காட்டி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. இது 30 நிமிடத்தில் சரி செய்யக் கூடிய விஷயம். இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?

    நேற்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டார்கள்.

    தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்.

    இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக மாநில அரசின் உரிமைக்கு எதிராக செயல்படுவது அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுத்தும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

    அப்போது எல்லா விஷயங்களையும் எடுத்துரைப்போம். இந்த மாதிரி தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை.

    தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் தமிழகத்தில் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் என்ற மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். #TTVDinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன் படி இயங்கி வரும் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவர்களை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கி வந்த இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா-2017 தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



    கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே, நீட் என்கின்ற அடியிலிருந்து மீளாத அதிர்ச்சியில் நாம் உள்ள நிலையில், தற்போது தேசிய மருத்துவ ஆணையம் என்ற பேரிடியை நம் தலையில் இறக்க மத்திய அரசு தீர்மானித்துவிட்டது. எல்லா அதிகாரங்களையும் மாநிலத்திடமிருந்து பறித்து விழுங்கவேண்டும் என மத்திய அரசு நினைப்பது கண்டனத்திற்குரியது. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்கவேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.#TTVDinakaran
    தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    மத்திய அரசு அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இதனால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மற்ற 20 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவார்கள்.

    இதனால் மாநில உரிமை பறிபோகின்றது. மேலும் தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.எனவே தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆஸ்பத்திரிகள் அடைக்கப்பட்டு இருக்கும். பிரசவ மற்றும் அவசர சிகிச்சைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். #tamilnews
    ×