search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு சமையல் தொழிலாளி கொலையில்   அ.தி.மு.க. பிரமுகர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
    X

    கைதான வானமாமலை என்ற சுரேஷ்.

    களக்காடு சமையல் தொழிலாளி கொலையில் அ.தி.மு.க. பிரமுகர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

    • களக்காடு சமையல் தொழிலாளி முருகன் என்பவர் கடந்த 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
    • உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், யாதவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது43). சமையல் தொழிலாளி.

    இவர் கடந்த 22-ந்தேதி காலை வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் அதேபகுதியை சேர்ந்த வானமாமலை என்ற சுரேஷ்(38) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து முருகனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிங்கிகுளத்தை சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா (34), ராமச்சந்திரன் (43) கீழதேவநல்லூரை சேர்ந்த இசக்கிப்பாண்டி (32), இசக்கிமுத்து (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    கடந்த உள்ளாட்சி தேர்தலில் நான் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஆதரவாக முருகன் தேர்தல் பணியாற்றினார். இதனால் நான் தோல்வியடைந்தேன்.

    எனது தோல்விக்கு காரணமாக முருகன் மீது எனக்கு விரோதம் ஏற்பட்டது. இதனால் அவரை தீர்த்துக் கட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அதனை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×