search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் ஊழியர் எரித்துக்கொலை: தொழில் அதிபர் மனைவி முன்ஜாமீன் பெற முயற்சி
    X

    பெண் ஊழியர் எரித்துக்கொலை: தொழில் அதிபர் மனைவி முன்ஜாமீன் பெற முயற்சி

    • தொழில் அதிபர், அவரது மனைவி ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
    • கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மற்றும் ஈரோட்டில் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நவநீதன் வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் தொடர்ந்து 6 முறை கர்ப்பம் ஆனேன். 6 முறையும் மிரட்டியே எனது கர்ப்பத்தை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றேன். அங்கு நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து என் மீது தீவைத்து எரித்தனர் என கூறியிருந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதைத்தொடர்ந்து தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்து நவநீதன், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஆர்.எஸ்.புரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நவநீதனின் மனைவி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வரும் 3 தனிப்படை போலீசார் நவநீதன் மனைவியை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அகிலா ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் வக்கீல்கள் மூலம் கோவை கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.

    Next Story
    ×