என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
    • போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பால் பண்ணையின் தொழிற்சாலை அவல்பூந்துறை அடுத்த காதக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையில் முறையாக சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதில்லை என பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள காதக்கிணறு, செம்மண் குழி, காட்டு வலசு, மின்னல் காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நீர் மாசுவை தொடர்ந்து காற்று மாசுவும் இந்த ஆலை ஏற்படுத்துவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசும் மாசு காற்று காரணமாக வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் வீடு முழுவதும் கருந்துகள்கள் படிந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.

    கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பரிதவித்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திடீரென ஆலை முன் திரண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தையடுத்து அங்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழ் தெரியாத நிலையில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தமிழ் தெரிந்த நிர்வாகிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீஸ் ஆய்வாளர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எத்தனை முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தீர்கள், ஏன் இரவில் வந்து இதுபோன்ற போராட்டம் நடத்துகிறீர்கள், முதலில் சென்று மாவட்ட கலெக்டர் அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளியுங்கள், எங்கும் புகார் தெரிவிக்காமல் இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என பொது மக்களிடம் பேசினார்.

    மேலும் காவல் நிலையத்திற்கு நாளை நேரில் வாருங்கள் அங்கு வந்து புகார் அளித்தால் ஆலை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆலை நிர்வாகம், பொது மக்கள் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன.
    • தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி , பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு, தண்ணீரை தேடி சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அந்த யானை கூட்டங்கள் அந்தப் பகுதியில் சுற்றி வந்தன. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டங்கள் சென்றன. இதன் பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானை கூட்டங்கள் இடம்பெயர்ந்து வருகிறது. அதன்படி கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து தமிழக எல்லைப் பகுதியான காரப்பள்ளம், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.

    தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணக் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.

    • கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது.
    • வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி, பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று உணவுக்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் அருகே அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.

    நீண்ட நேரமாக கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    குறிப்பாக உணவு தண்ணீருக்காக யானைகள் வெளியே வருகின்றன. இதனால் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
    • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வந்தது.

    நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டு வந்தனர்.

    மூன்றாவது நாளாக இன்றும் மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி, சுஜில் கரை, கோட்டமாளம், பூதாளபுரம், தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
    • பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரியபுலியூர் அருகேயுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரதீப் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

    இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார்.
    • அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார்.

    கோபி:

    அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சு கடும் சர்ச்சையானது. இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.செங்கோட்டையன் எம்.எல். ஏ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை 9:15 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டம் மேடையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பெரிய அளவில் இருந்தன. இதேபோல் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படமும் பெரியளவில் இருந்தன.

    மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்ற வாசகமும் இருந்தன.

    ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்.

    ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டும், அதை விடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.

    இந்திய ஒருமைப்பாடு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் இப்படி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க போராட்டம் முன்னெடுத்து உள்ளது. இது போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டம் ஓசி என்று சொல்கிறார், அப்படி கொச்சைப்படுத்தி பேச அவருக்கு தகுதி இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் தி.மு.க அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அ.தி.மு.க 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க. செல்லும் பாதை சரியானதாக இல்லை. கொடிவேரி சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கோபியில் புறவழிச்சாலை அமைக்கப்படும், கோபி முதல் தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை திட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்படும்.

    வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்போடு இருந்து வருகிறோம். இதோடு அமைச்சர் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைப்போம். அதற்கு தொண்டானாக இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.

    100 நாள் தொழிலாளர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் ஊதியம் பெறுவதற்கு சட்டமன்றத்தில் குரல் எடுப்போம். அது போல ஊதியம் வருவதற்கு எதிர்கட்சி தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேசிய வார்த்தைக்காக கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஒரு அமைச்சர் தான் பொறுப்பேற்கும் போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கிறார்.

    அப்படி உறுதிமொழி மீறி ஒரு அமைச்சர் இது போன்ற வார்த்தைகளை பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. இதனை தி.மு.க அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அமைச்சர் இப்படி பேசி இருக்க கூடிய நிலையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    அமைச்சர் பேச்சு மற்றவர்கள் புண்படும் அளவிற்கு குறிப்பாக பெண்கள் மனம் புண்படும் அளவிற்கு பெண்களை இழிவு படுத்தும் வார்த்தை என்பது அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. ஆகையால் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்குப் பிறகு என்ன முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை கழகப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முடிவு செய்வார். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, இது போன்ற நிலை ஏற்படும் போது அப்போது ஆட்சி காலத்தில் அ.தி.முக. இருந்த சூழலில் மூன்று மாதத்திற்கான தொகை அரசே வழங்கியது. அதற்குப் பிறகு மத்திய அரசு வழங்கிய நிதியை அரசு நிதியில் சேர்க்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் விளைபொருட்களில் பணப்பயிர் என்று அழைக்கப்படுவது கரும்பும், மஞ்சளும் ஆகும். ஈரோடு மஞ்சளுக்கு இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை இல்லாமை, புதிய நோய் பாதிப்பு போன்ற காரணங்களினால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.

    குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையே விலை கிடைத்ததால் விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈரோடு மஞ்சள் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி குவிண்டால் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாய பெருமக்கள் மஞ்சள் பயிரிடும் பணியில் ஆர்வம் காட்ட தொடங்கினர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக மஞ்சள் மார்க்கெட் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    பிறகு மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்கள் காரணமாக மஞ்சள் மார்க்கெட் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெற்றன. இதனால் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை சற்று விலை குறைந்து விற்பனையானது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.நேற்று ஈரோடு வெளிமார்க்கெட்டில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 6 ஆயிரத்து 941 முட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதில் 3 ஆயிரத்து 119 மூட்டைகள் விற்பனையானது. சேலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 59 முதல் ரூ.15 ஆயிரத்து 93 வரை ஏலம் போனது. இதேபோல் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 519 முதல் ரூ.14 ஆயிரத்து 539 வரை ஏலம் போனது.

    மேலும் ஈரோடு சொசைட்டியில் உள்ள விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 569 முதல் ரூ.14 ஆயிரத்து 899 வரை ஏலம் போனது. இவ்வாறு மீண்டும் மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரத்தை கடந்து விற்பனையாவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
    • மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மாலை முதல் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.

    பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்தது. அம்மாபேட்டை அடுத்துள்ள நத்தமேடு, மணக்காடு தோட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் 5 நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று மழை பெய்த பொழுது மாடுகளை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    அப்போது அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் இடி பிடித்து மின்னல் அங்கிருந்த 3 மாடுகளை தாக்கியது. இதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மற்றொரு மாடு அதிர்ஷ்டசமாக உயிர் தப்பியது. மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சம்பவம் இடத்திற்கு பூனாச்சி கிராம நிர்வாக அலுவலர் விரைந்து சென்று இருந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். இறந்த மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என விவசாயி முருகேசன் வேதனையுடன் கூறினார். மேலும் நஷ்ட ஈடு வழங்கவும் கோரிக்கை எடுத்துள்ளார். இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. 

    • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

    வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • வெற்றி என்ற இலக்கை எட்டுவது என்பது இன்றைய சூழலில் இமயமலையை எட்டி பிடிப்பது போன்று.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயைம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியானது பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமமாகும். இங்கு மட்டும் பவானி ஆற்றை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.

    பவானி ஆற்றின் அருகே தனியார் ஒருவர் சாய தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சாய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சாய கழிவு ஆற்றில் கலந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு போன்று மாசுபடுவதுடன், பவானி ஆற்றை நம்பி உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட பாசன பகுதியில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பவானி ஆற்றில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் பாழாகும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் சாய சலவை ஆலை அமைக்க அனுமதி அளித்ததை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார்.

    இதற்கு, சாயசலவை ஆலைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசால் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து அரசை அணுகி பெரும் முயற்சியையும் உதவியையும் செய்ததற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது,

    அரசு ஆலைக்கு தடை விதிக்கும் போது ஆலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் சென்று விடக்கூடாது என்பதற்காக அரசின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. எனது தனிப்பட்டது அல்ல.

    இந்த பகுதியில் விவசாயிகள் குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என மக்களில் ஒருவராக இருந்து இந்த பணியை செய்கிறேன். பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் இந்த ஆலை வராமல் இருக்க உங்களுடன் இருந்து பணியாற்றுவேன்.

    பவானி ஆற்றங்கரையோரத்தில் எந்த காலத்தில் சாய ஆலை வராது. இனி பவானி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முயற்சி தான் வெற்றி பெற்றுள்ளது. 15.65 லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் இங்கு வரும் ஆலை பெருந்துறை சிப்காட்டிற்கு செல்லலாம் என்றார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வெற்றி என்ற இலக்கை எட்டுவது என்பது இன்றைய சூழலில் இமயமலையை எட்டி பிடிப்பது போன்று. இதற்கு பல்வேறு பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியை தான் விவசாய சங்கத்தினர் செய்தனர்.

    விவசாயிகளின் பெரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முன் அனுமதி திரும்ப பெரும் நிலை 15 நாட்களில் விவசாயிகளின் முயற்சியால் கிடைக்கவுள்ளது.

    விவசாயிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்திக்கும்போது விவசாயிகளுக்கு ஊக்கத்தை தரும் வகையில் நல்ல பதிலை தந்தது வரவேற்கதக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? மதுரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் செங்கோட்டையன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

    • கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.

    இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்ப ரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாைர தப்பட்டை மீனாட்சி வாத்தி யத்துடன் அம்மன் பாரம்ப ரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடை பெற்றது.

    தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.


    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளை யம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.


    இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    பின் வரிசையில் காத்தி ருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்ட னர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமி கள் உள்ளிட்ட லட்சக்க ணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே... என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவு க்கு பக்தி கோஷம் எழுப்ப ப்பட்டது.

    இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.

    இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனை தொட ர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் கோவில் வளா கத்தை சுற்றி தயார் நிலை யில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு கோபி கோவை புளியம்பட்டி சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப் பட்டன.

    அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்ய ப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா மல் பக்தர்கள் குண்டம் இறங்கி சென்று பண்ணாரி அம்மனை வழிபட கோவில் சார்பில் அனைத்து ஏற்பாடு களும் தீவிரமாக செய்ய ப்பட்டது.

    இதையொட்டி வன த்துறையினரும் வனப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.

    ஆனால் மாலை நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூரில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நம்பியூர் அருகே உள்ள சூரிபாளையம், நம்பியூர் சூரியம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வளாகத்தில் 5 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இரவு நேரம் மரங்கள் விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

    குறிப்பாக சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட்டு வீடு, குடிசை வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    குப்பிபாளையம் பகுதியில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டு இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.

    இதேபோல் நம்பியூர் அடுத்த காந்திபுரம் மேடு பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள நடுநிலைபள்ளி வளாகத்தில் உள்ள மரம் முறிந்து கழிப்பறை மீது விழுந்தது.

    இதனால் இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அதே சமயம் சூறாவளிக்காற்றும் வீசியது. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே. புதூரை சேர்ந்த ராசு என்பவர் தோட்டத்தில் 500 கதளி ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதே போல் வட்டக்காடு கிராமத்தில் நிர்மல்குமார் என்பவர் தோட்டத்தில் 100 செவ்வாழைகள், அதே பகுதியில் குமார் என்பவர் தோட்டத்தில் 400 செவ்வாழை மரங்கள், முத்தரசன் குட்டையில் தேவராஜ் என்ற ஒரு தோட்டத்தில் 100 கதளி வாழை மரங்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தன.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முடிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    களம்பூர் மலைப்பகுதிகளும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அனைத்தரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால் 4 மின்கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. கடம்பூர் மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏற்கனவே 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இதே போல் பர்கூரின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் கனமழை பெய்தது. இதில் ஓசூர், கொங்காடை, செங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் அருகே உள்ள மண் ரோடு சேரும் சகதியுமாக காட்சியளித்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று சேற்றில் சிக்கியது.

    அப்பகுதி மக்கள் உதவியுடன் மினி பஸ் மீட்கப்பட்டது. அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கவுந்தப்பாடி, வரட்டு பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் இருந்தது. இரவு 9 மணி முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    ×