என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார்.
    • அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார்.

    கோபி:

    அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சு கடும் சர்ச்சையானது. இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.செங்கோட்டையன் எம்.எல். ஏ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை 9:15 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டம் மேடையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பெரிய அளவில் இருந்தன. இதேபோல் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படமும் பெரியளவில் இருந்தன.

    மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்ற வாசகமும் இருந்தன.

    ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்.

    ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டும், அதை விடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.

    இந்திய ஒருமைப்பாடு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் இப்படி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    அமைச்சர் மக்களை பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க போராட்டம் முன்னெடுத்து உள்ளது. இது போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டம் ஓசி என்று சொல்கிறார், அப்படி கொச்சைப்படுத்தி பேச அவருக்கு தகுதி இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் தி.மு.க அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அ.தி.மு.க 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க. செல்லும் பாதை சரியானதாக இல்லை. கொடிவேரி சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கோபியில் புறவழிச்சாலை அமைக்கப்படும், கோபி முதல் தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை திட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்படும்.

    வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்போடு இருந்து வருகிறோம். இதோடு அமைச்சர் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைப்போம். அதற்கு தொண்டானாக இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.

    100 நாள் தொழிலாளர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் ஊதியம் பெறுவதற்கு சட்டமன்றத்தில் குரல் எடுப்போம். அது போல ஊதியம் வருவதற்கு எதிர்கட்சி தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பொன்முடி பேசிய வார்த்தைக்காக கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஒரு அமைச்சர் தான் பொறுப்பேற்கும் போது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கிறார்.

    அப்படி உறுதிமொழி மீறி ஒரு அமைச்சர் இது போன்ற வார்த்தைகளை பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. இதனை தி.மு.க அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அமைச்சர் இப்படி பேசி இருக்க கூடிய நிலையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    அமைச்சர் பேச்சு மற்றவர்கள் புண்படும் அளவிற்கு குறிப்பாக பெண்கள் மனம் புண்படும் அளவிற்கு பெண்களை இழிவு படுத்தும் வார்த்தை என்பது அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. ஆகையால் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்குப் பிறகு என்ன முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை கழகப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முடிவு செய்வார். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, இது போன்ற நிலை ஏற்படும் போது அப்போது ஆட்சி காலத்தில் அ.தி.முக. இருந்த சூழலில் மூன்று மாதத்திற்கான தொகை அரசே வழங்கியது. அதற்குப் பிறகு மத்திய அரசு வழங்கிய நிதியை அரசு நிதியில் சேர்க்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் விளைபொருட்களில் பணப்பயிர் என்று அழைக்கப்படுவது கரும்பும், மஞ்சளும் ஆகும். ஈரோடு மஞ்சளுக்கு இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை இல்லாமை, புதிய நோய் பாதிப்பு போன்ற காரணங்களினால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.

    குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையே விலை கிடைத்ததால் விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈரோடு மஞ்சள் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி குவிண்டால் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாய பெருமக்கள் மஞ்சள் பயிரிடும் பணியில் ஆர்வம் காட்ட தொடங்கினர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக மஞ்சள் மார்க்கெட் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    பிறகு மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்கள் காரணமாக மஞ்சள் மார்க்கெட் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெற்றன. இதனால் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை சற்று விலை குறைந்து விற்பனையானது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.நேற்று ஈரோடு வெளிமார்க்கெட்டில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 6 ஆயிரத்து 941 முட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதில் 3 ஆயிரத்து 119 மூட்டைகள் விற்பனையானது. சேலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 59 முதல் ரூ.15 ஆயிரத்து 93 வரை ஏலம் போனது. இதேபோல் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 519 முதல் ரூ.14 ஆயிரத்து 539 வரை ஏலம் போனது.

    மேலும் ஈரோடு சொசைட்டியில் உள்ள விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 569 முதல் ரூ.14 ஆயிரத்து 899 வரை ஏலம் போனது. இவ்வாறு மீண்டும் மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரத்தை கடந்து விற்பனையாவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
    • மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மாலை முதல் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.

    பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்தது. அம்மாபேட்டை அடுத்துள்ள நத்தமேடு, மணக்காடு தோட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் 5 நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று மழை பெய்த பொழுது மாடுகளை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    அப்போது அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் இடி பிடித்து மின்னல் அங்கிருந்த 3 மாடுகளை தாக்கியது. இதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மற்றொரு மாடு அதிர்ஷ்டசமாக உயிர் தப்பியது. மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சம்பவம் இடத்திற்கு பூனாச்சி கிராம நிர்வாக அலுவலர் விரைந்து சென்று இருந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். இறந்த மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என விவசாயி முருகேசன் வேதனையுடன் கூறினார். மேலும் நஷ்ட ஈடு வழங்கவும் கோரிக்கை எடுத்துள்ளார். இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. 

    • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

    வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • வெற்றி என்ற இலக்கை எட்டுவது என்பது இன்றைய சூழலில் இமயமலையை எட்டி பிடிப்பது போன்று.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயைம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியானது பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமமாகும். இங்கு மட்டும் பவானி ஆற்றை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.

    பவானி ஆற்றின் அருகே தனியார் ஒருவர் சாய தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சாய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சாய கழிவு ஆற்றில் கலந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு போன்று மாசுபடுவதுடன், பவானி ஆற்றை நம்பி உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட பாசன பகுதியில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பவானி ஆற்றில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் பாழாகும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் சாய சலவை ஆலை அமைக்க அனுமதி அளித்ததை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார்.

    இதற்கு, சாயசலவை ஆலைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசால் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து அரசை அணுகி பெரும் முயற்சியையும் உதவியையும் செய்ததற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது,

    அரசு ஆலைக்கு தடை விதிக்கும் போது ஆலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் சென்று விடக்கூடாது என்பதற்காக அரசின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. எனது தனிப்பட்டது அல்ல.

    இந்த பகுதியில் விவசாயிகள் குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என மக்களில் ஒருவராக இருந்து இந்த பணியை செய்கிறேன். பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் இந்த ஆலை வராமல் இருக்க உங்களுடன் இருந்து பணியாற்றுவேன்.

    பவானி ஆற்றங்கரையோரத்தில் எந்த காலத்தில் சாய ஆலை வராது. இனி பவானி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முயற்சி தான் வெற்றி பெற்றுள்ளது. 15.65 லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் இங்கு வரும் ஆலை பெருந்துறை சிப்காட்டிற்கு செல்லலாம் என்றார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வெற்றி என்ற இலக்கை எட்டுவது என்பது இன்றைய சூழலில் இமயமலையை எட்டி பிடிப்பது போன்று. இதற்கு பல்வேறு பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியை தான் விவசாய சங்கத்தினர் செய்தனர்.

    விவசாயிகளின் பெரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முன் அனுமதி திரும்ப பெரும் நிலை 15 நாட்களில் விவசாயிகளின் முயற்சியால் கிடைக்கவுள்ளது.

    விவசாயிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்திக்கும்போது விவசாயிகளுக்கு ஊக்கத்தை தரும் வகையில் நல்ல பதிலை தந்தது வரவேற்கதக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? மதுரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் செங்கோட்டையன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

    • கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.

    இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்ப ரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாைர தப்பட்டை மீனாட்சி வாத்தி யத்துடன் அம்மன் பாரம்ப ரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடை பெற்றது.

    தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.


    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளை யம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.


    இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    பின் வரிசையில் காத்தி ருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்ட னர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமி கள் உள்ளிட்ட லட்சக்க ணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே... என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவு க்கு பக்தி கோஷம் எழுப்ப ப்பட்டது.

    இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.

    இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனை தொட ர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் கோவில் வளா கத்தை சுற்றி தயார் நிலை யில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு கோபி கோவை புளியம்பட்டி சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப் பட்டன.

    அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்ய ப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா மல் பக்தர்கள் குண்டம் இறங்கி சென்று பண்ணாரி அம்மனை வழிபட கோவில் சார்பில் அனைத்து ஏற்பாடு களும் தீவிரமாக செய்ய ப்பட்டது.

    இதையொட்டி வன த்துறையினரும் வனப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.

    ஆனால் மாலை நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூரில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நம்பியூர் அருகே உள்ள சூரிபாளையம், நம்பியூர் சூரியம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வளாகத்தில் 5 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இரவு நேரம் மரங்கள் விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

    குறிப்பாக சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட்டு வீடு, குடிசை வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    குப்பிபாளையம் பகுதியில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டு இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.

    இதேபோல் நம்பியூர் அடுத்த காந்திபுரம் மேடு பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள நடுநிலைபள்ளி வளாகத்தில் உள்ள மரம் முறிந்து கழிப்பறை மீது விழுந்தது.

    இதனால் இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அதே சமயம் சூறாவளிக்காற்றும் வீசியது. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே. புதூரை சேர்ந்த ராசு என்பவர் தோட்டத்தில் 500 கதளி ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதே போல் வட்டக்காடு கிராமத்தில் நிர்மல்குமார் என்பவர் தோட்டத்தில் 100 செவ்வாழைகள், அதே பகுதியில் குமார் என்பவர் தோட்டத்தில் 400 செவ்வாழை மரங்கள், முத்தரசன் குட்டையில் தேவராஜ் என்ற ஒரு தோட்டத்தில் 100 கதளி வாழை மரங்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தன.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முடிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    களம்பூர் மலைப்பகுதிகளும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அனைத்தரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால் 4 மின்கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. கடம்பூர் மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏற்கனவே 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இதே போல் பர்கூரின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் கனமழை பெய்தது. இதில் ஓசூர், கொங்காடை, செங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் அருகே உள்ள மண் ரோடு சேரும் சகதியுமாக காட்சியளித்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று சேற்றில் சிக்கியது.

    அப்பகுதி மக்கள் உதவியுடன் மினி பஸ் மீட்கப்பட்டது. அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கவுந்தப்பாடி, வரட்டு பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் இருந்தது. இரவு 9 மணி முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • அணைக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கோபி, கொடிவேரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    கோபி கரட்டடிபாளையம், நல்லகவுண்டன் பாளையம், கோபிபாளையம், பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம், மொடச்சூர், வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், பொலவ காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதை தொடர்ந்து விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மின் தடையும் ஏற்பட்டு அதிகாலை 3 மணி அளவில் மின் தடை நீங்கியது.

    இந்த நிலையில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையொட்டி கொடிவேரி அணையில் 948 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதன் காரணமாக தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதை தொடர்ந்து கொடிவேரி அணையின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் பலர் கொடிவேரி அணைக்கு வந்து இருந்தனர். அணைக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    • அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்து வந்தனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் திணறி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன்படி நேற்று முன் தினம் சுமார் அரை மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கன மழையாக கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் கோபி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சாலையோரம் தேங்கி நின்றது.

    இடியுடன் கூடிய கன மழையால் பல்வேறு இடங் களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோபி அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. அதன் அருகே கசிவு நீர் குட்டையில் நேற்று இரவு பெய்த மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 15 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து கோபி தாசில்தார் சரவணன், நீர்வளத் துறை அதிகாரிகள், பொது பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் வடிந்தது. இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதே போல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    அப்போது அந்தியூர் கருவாச்சி அடுத்த பால பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இடி தாக்கியது. இதில் கோவிலில் லேசான சேதாரம் ஏற்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எலந்தை குட்டை மேடு, கவுந்தப்பாடி பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் நம்பியூர் அம்மாபேட்டை, கொடி வேரி, மாவட்ட அணை பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதைப்போல் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் சேரும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வரு மாறு:- கோபி-155, எலந்த குட்டைமேடு-100.40, கவுந்தப்பாடி-91.40, நம்பியூர்-79, கொடிவேரி-52.20, வரட்டு பள்ளம்-51.20, பவானி சாகர்-39.40, சென்னிமலை -39, குண்டேரி பள்ளம்-29.40, சத்தியமங்கலம்-23, பவானி-19, தாளவாடி-15, ஈரோடு-12.30, மொடக்குறிச்சி-3, பெருந்துறை-2.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடை பெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கோவில் திருவிழா காரணமாக ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் வளாகத்திலேயே பழச் சந்தையும் செயல்பட்டு வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எப்பவும் வ.உ.சி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டமாக பரபரப்புடன் காட்சியளிக்கும்.

    இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி இன்று காலை ஆயிரக்கணக்கான காய்கறி வியாபாரிகள் கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் புனித நீரை எடுத்து ஊர்வலமாக வந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    இன்று காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல் தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். விடுமுறை அளிக்க ப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
    • லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (வயது 48) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.

    அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம், என்ஜினீயர் வருணிடம் பேசி உள்ளார். பின்னர் முடிவில் ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கடந்த 25ம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி லஞ்ச வழக்கில் சிக்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி உதவியாளர் சுப்ரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு:

    சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    ×