பவானியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பவானியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது
Published on

பவானி:

ஈரோடு மாவட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் மாவட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜீவா நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பவானி, குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர் பகுதியில் வசிக்கும் சரவணன் (வயது 33) என்பவர் அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெள்ளை துண்டு சீட்டில் எழுதி வைத்து கொண்டு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சரவணனை கைது செய்து அவரிடம் இருந்து ரொக்கப் பணம் 8 லட்சத்தது 56 ஆயிரம் ரூபாய், 3 செல்போன்கள் மற்றும் 65 வெள்ளை துண்டு சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மாதையன், விக்கி, கணேசன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com