என் மலர்
ஈரோடு
ஈரோடு:
திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி, மதசார்பின்மை மாநில உரிமை விளக்க பொதுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நற்குணன் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, தி.க. அமைப்பு செயலாளர் சண்முகம், பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-
புதுடெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி வைப்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்கள் ஆடி கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெரியாரின் போராட்டத்தால் அன்று அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடிந்தது. காமராஜர் முதல் நமது தமிழக முதல்- அமைச்சர்கள் கொண்டு வந்த 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் நமக்காக கட்டப்பட்டவை.தமிழக அரசு ஒப்புதல் இன்றி சமூக நீதி எதிராக நீட் தேர்வினை பா.ஜனதா அரசு திணித்து உள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் 30 பேர் பட்டியலில் ஒரு தமிழர் பெயராவது இருக்கிறதா? பிளஸ்-2 பொது தேர்வில் 119.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவிக்கு இடம் இல்லை.
எனவே சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட்தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். அரியானா போன்று கலவரம் ஏற்படுத்தும் போராட்டம் அல்ல. இது பெரியாரின் வழியில் போராட்டம். காவிகளின் போராட்டம் அல்ல. பெரியாரின் கொள்கை இருக்கும் வரை இங்கு மதவாதம் வளர முடியாது.
பா.ஜனதா நீட்தேர்வு மூலம் மத்திய பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை கலக்க நினைக்கிறது. இது மிக பெரிய சூழ்ச்சி வலை, அதை முறியடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் கோபியில் நடந்தது. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
புரட்சிதலைவர், புரட்சி தலைவி கண்ட அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சி. அ.தி.மு.க. தமிழகத்தில் இன்னும் தொடர்ந்து எக்கு கோட்டையாகவே உள்ளது. இந்த ஆட்சி மெஜாரிட்டி இழந்து விடும் கலைந்து போகும் என மனப்பால் குடிக்கிறார்கள். கற்பனை கனவு காண்கிறார்கள். இந்த கனவு ஒருபோதும் பலிக்கப்போவது இல்லை.
அ.தி.மு.க.வுக்கு தற்போது சோதனைதான் வந்துள்ளதே தவிர எந்தஒரு தொண்டனும் மாற்றுக் கட்சிக்கு சென்றது கிடையாது, செல்லவும் மாட்டான்.
இந்த ஆட்சி நீடிக்கும் என்ற அ.தி.மு.க. தொண்டர்களுடைய கனவுகள் நிறைவேறும். ஈரோட்டில் வரும் 6-ந்தேதி நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
எங்களுக்கு தற்போது பல்வேறு சோதனைகள் வந்துள்ளது உண்மைதான். ஒருசிலர் இந்த ஆட்சி நீடிக்காது என பேசி வருகிறார்கள். இந்த சோதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சாதனை வரலாற்றை படைப்போம். 4 ஆண்டு மட்டுமல்ல தொடர்ந்து 400 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்கும்.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
கோபி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோபி, கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வர வேற்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோபி சட்டமன்றத் தொகுதியில் நம்பியூரில் அரசு கலைக் கல்லூரியும், டி.ஜி.புதூரில் தொழிற் பயிற்சியும் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நம்பியூர் பகுதியில் அரசு சார்பில் விளையாட்டு ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது.
கோபியில் தொழிற்பயிற்சி (ஐடிஐ) மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்கு சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப், சைக்கிள், மற்றும் ரூபாய் 500 அரசு சார்பில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
இன்னும் 15 நாட்களில் தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து சிறந்த கல்வியாளர்களையும் அழைத்துப் பேசி வருகிறோம்.
கல்வித்துறையில் கடுமையாக உழைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கு 54 ஆயிரம் வினா, விடை கொண்ட புத்தகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 1 மாதத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இன்னும் ஒரு வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதில் ஒரு சிம் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்கிறார்களா? என்பது குறித்து பெற்றோர்களுக்கு தெரியவரும். தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த மாதம் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ. 60 கோடி செலவில் தொடங்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் பாடத்திட்டங்களை மாற்றுவதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். படித்து முடித்த உடன் வேலை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உருவாக்கும்.
ரேங்க் சிஸ்டம் மூலம் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு நடைபெறும் நாட்களையும், முன்னதாகவே, இந்த ஆண்டு எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனில் 19 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளையும் அறிந்துள்ளனர்.
இந்த ஆண்டு 42 கலை அறிவியல் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரி, 9 தொழிற்பயிற்சி மையத்தையும், 4 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் துவக்கியுள்ளது. எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இந்த அரசானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஆண்டு 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூபாய் 26,942 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நிகழ்ச்சியில், கோபி ஆர்.டி.ஒ. கோவிந்தராஜன், தாசில்தார் பூபதி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி(எ) சுப்பிரமணியம், கோபி கலைக்கல்லூரி செயலாளர் தரணீதரன், முதல்வர் செல்லப்பன், நிர்வாக அலுவலர் கந்தசாமி, நம்பியூர் குமுதா கல்வி நிறு வனங்களின் தாளாளர் ஜனகரத்தினம், குருகுலம் பள்ளி முதல்வர் ரங்கராஜன், மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
அசாம் மாநிலம், நாகான், புரேப்குயிமாரி, பி.எஸ்.கம்பூர் பகுதியை சேர்ந்தவர் பின்டுஹிரா(வயது21). இவர் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சிகோட்டையில் உள்ள ஒரு தனியார் பிராஸசிங் கம்பெனியில் கடந்த 1½ வருடமாக தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பின்டுஹிரா சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
மேலும் பின்டுஹிராவின் பெற்றோர் அவரிடம் பணம் கேட்டதாகவும், இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பின்டு ஹிரா இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றவர் கம்பெனி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பின்டுஹிரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரச்சலூர் அடுத்த கொமாரபாளையம், சகாயபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது30). லாரி டிரைவர். இவரது மனைவி உஷா.
சிவகுமாருக்கும், உஷாக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது. சிவகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் சிவகுமார் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக சிவகுமாரை சிகிச்சைக்காக நத்தக்காடைபூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வி ஏற்பட்டதற்கு தமிழக அரசின் மெத்தன போக்கு ஒரு காரணமாக இருந்தாலும் முக்கிய காரணம் பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களுமே ஆவார்கள்.
ஏனென்றால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று திரண்டு போராடியது போன்று நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியதால்தான் நாம் அதில் வெற்றி பெற முடிந்தது.
அதே போன்று நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் களத்தில் இறங்கி போராடவில்லை. இதனால் நாம் இந்த வருடம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முடியாமல் போய் விட்டது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ள எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு அ.தி.மு.க. அணிகள் இணைப்பே சிறந்த உதாரணம். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஊழல் ஆட்சி என்று ஓ. பன்னீர் செல்வம் ஒரு வாரத்திற்கு முன் சென்னார்.
ஆனால் தற்போது துணை முதல்-அமைச்சர் பதவியில் உள்ளார். ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்ததால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவது இல்லை.
இவர்களால் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது. தமிழ்நாட்டின் நலன் கருதி கவர்னர் இந்த விசயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் தனக்கு 1½ கோடி தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்கிறார். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியும், தினகரனும் தங்களுக்கு 1½ கோடி தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள்.
உண்மையிலேயே தொண்டர்கள் ஆதரவு இவர்களில் யாருக்கு இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள இவர்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்துக்கு நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் ஓரளவு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.12 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2475 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக நீலகிரி மலையில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தினர் அணையில் தண்ணீர் போதுமானதாக இருப்பதால் உயிர்நீர் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் இப்போதுள்ள அணையின் நீர் இருப்பை பொறுத்தவரை இன்னும் கூடுதலாக 10 அடியாவது தண்ணீர் இருக்க வேண்டும் என பொதுப்பணி துறையினர் கருதுகிறார்கள்.
நீலகிரி மலையில் தொடர்ந்து பருவமழை பெய்து தினமும் கணிசமான முறையில் நீர்வரத்து வந்து கொண்டிருந்தால் மட்டுமே விவசாயத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் சாத்தியம் உள்ளது.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவர் தினகரன் ஆதரவாளராக செயல்பட்டார். அவருக்கு அமைப்பு செயலாளர் பதவியை தினகரன் வழங்கினார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்தது. இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் தோப்பு வெங்கடாச்சலம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர் யாருக்கு ஆதரவு? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு இன்று பதில் அளிப்பதாக தோப்பு வெங்கடாச்சலம் கூறி இருந்தார். அதன்படி பெருந்துறையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரிய பெரிய இயக்கங்களில் சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுவது சகஜம். அ.தி.மு.க.விலும் எம்.ஜி.ஆர். இறந்தபோது பிளவு ஏற்பட்டது. அம்மா அந்த பிளவை ஒன்றுபடுத்தினார். இப்போதும் 3 அணியாக பிளவுபட்டு இருந்தது.
அம்மா இருந்தபோது நான் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. ஆட்சி நூறாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். அதேபோல மக்களும் 5 ஆண்டு காலம் ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள்.
அ.தி.முக. ஆட்சி என்பது மறைந்த அம்மா ரத்தத்தில் ஏற்பட்ட ஆட்சி. அந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஒட்டு மொத்த அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான்.
அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 19 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேச வேண்டும். நான் அ.தி.மு.க.வில்தான் உள்ளேன். என்னை அந்த அணி இந்த அணி என்று கூற வேண்டாம்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் கைகோர்த்து ஒன்று சேர்ந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதைதான் அ.தி.மு.க. தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அம்மாவின் இந்த ஆட்சி 5 ஆண்டு தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் ஒரு தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார்.
இவருக்கும் திருப்பூரை சேர்ந்த பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. சங்கர் தன் தாய் தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
தற்போது பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது தாய்,தந்தை,மாமன் ஆகியோர் பார்த்து விட்டு அடுத்த மாதம் வளைகாப்பு செய்வது குறித்து பேசி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பவானி வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சங்கர் நீண்ட நேரம் கதவு தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த சங்கர் கதவின் மேல் ஏறி பார்த்தார். அங்கு பவானி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கதறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். ஆனால் பவானி இறந்து விட்டார்.
இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில் பவானி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது.
பவானி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளோடு பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் பவானிசாகர் அணைக்கு தற்போது நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதையொட்டி அணைக்கு தண்ணீர் வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2576 வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் தெங்கு மரகடாவில் இருந்து பவானிசாகர் வனப் பகுதியில் ஓடும் காட்டாறான மாயாற்றில் மழை வெள்ளம் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 55.44 அடியாக உள்ளது.
இன்று மாலை 57 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்யும் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வரும் விரைவில் பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வறட்சியால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாயிப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் அண்மைகாலமாக அங்கேயே முகாமிட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
அப்போது யானைகளை விரட்டும்போது மனித விலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. சில சூழ்நிலைகளில் கும்கியானைகளை வரவழைத்து கிராமத்துக்குள் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் விரட்டுகின்றனர்.
மேலும் சேற்றில் சிக்கி தவிக்கும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவனம், தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள், சிறுத்தை, மான்கள் வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடும்போது அதனை மீட்டு சிகிச்சை அளிக்க உரிய வாகன வசதியில்லாமல் விலங்குகள் உயிரிழந்து வருகிறது.
இது போன்ற வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வனவிலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம், பதிவுஎண் பெறுவதற்கு சத்தியமங்கலம் வனச்சகர அலுவலகத்துக்கு வந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ரூ. 20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹாட்ராலிக் ஆம்புலன்ஸ் யானைக்காக இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் யானைகள், கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் யானைகள் போன்ற அசாதரண நிகழ்வுகளை ஏற்படுத்தும் யானைகளை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு மாற்றும்போது வனத்துறையினர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
யானைகள் ஏறாமல் அடம்பிடிக்கின்றன. இந்த ஆம்புலன்ஸில் யானைகளை ஏற்றுவது மிகவும் எளிது. ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கிவைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம். இதில் 10 டன் வரை உள்ள யானைகளை ஏற்ற முடியும்.
மேல்தளத்தில் பாதுகாப்பு வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில மருத்துவ வசதிகளும், அவசரகால வழியும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் கும்கி யானையை வைத்து கோவையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இவ்வாறு கூறினர்.
யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’ இந்த ஆம்புலன்ஸை அடர்ந்த வனத்தில் நிறுத்திவைத்து வனத்துறையினர் அதிலிருந்தபடியே விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். சில கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் வனத்துரையினர் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று மாலை ஒன்றாக இணைந்தது. அணிகள் இணைப்பு நடந்த உடனடியாக ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். பாண்டியராஜன் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இவர்களுக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் சென்னையில் டி.டி.வி.தினகரன் நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கம்போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை புறக்கணிப்பதுபோல நேற்று தினகரன் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தையும் நேற்று அவரது ஆதரவாளரான பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் புறக்கணித்து விட்டார். கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இதனால் அவர் டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலக திட்டமிட்டு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எனக்கு எந்தவித பதவியும் தேவையில்லை. எனது தொகுதியான பெருந்துறை தொகுதி வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத திட்டங்களை நிறைவேற்றினால் போதும் என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறி இருந்தார். மேலும் மதுரை மேலூரில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களை திரட்டி சென்று இருந்தார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அணிகளின் இணைப்புக்கு பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. திடீர் மனமாற்றம் அடைந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தனது நிலைபாட்டை அவர் 24-ந்தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப் போவதாகவும் கூறி இருந்தாராம். இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தினகரன் அணியிலிருந்து விலகி ஒன்றாக இணைந்த அ.தி.மு.க. பக்கம் சாய்வார் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
அவரது உதவியாளர்களிடம் விசாரித்தபோது, ‘‘தினகரன் நடத்திய கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியாது. ஏதாவது முக்கிய தேவையாக எங்கேயாவது சென்றிருப்பார். இப்போது அவர் சென்னையில் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? தெரியவில்லை’’ என்று கூறினர்.
தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ஓரிரு நாட்களில் ஒன்றிணைந்த அ.தி.மு.க. அணியில் இணையக்கூடும் என அவரது நெருங்கிய ஆதுரவாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடுக்கு வந்தார்.
அப்போது தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க அரசு முன் வர வேண்டும்.அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்று வதில் விவசாயிகள் இடையே குளறுபடி உள்ளது.
பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அரசியல் கட்சியினரும், செல்வந்தர்களும் வாங்கி வாழ்ந்து வருகிறார்கள். இது தவறானது. எனவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் பழகுடியின மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்குவதில் குளறுபடி உள்ளது. இதனால் அவர்கள் அரசு சலுகைகளை பெற முடியாமல் உள்ளனர்.
மணல் கொள்ளை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் அணை, குளத்தை தூர்வாரும் போது எடுக்கப்படும் மண் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படு வதில்லை.
எனவே மணல் கொள்ளையை தடுக்க கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாதயாத்திரை நடத்தப்படும்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.






