என் மலர்
கோயம்புத்தூர்
- அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.
- எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது.
விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு இங்கு வந்துள்ளேன்.
* பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம்.
* அரசு நிகழ்ச்சியா அல்லது மண்டல மாநாடா என்று எண்ணக்கூடிய அளவுக்கு கூட்டம் இருக்கிறது.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம் என ஏராளமாக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
* அனைத்து திட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதல்வர் நான்தான்.
* திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி நடத்தி வருகிறார்கள்.
* பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
* கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக மதுரை போன்று நூலகம் அமைக்கப்படும்.
* திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* தென்னை நோய் பாதிப்புகளை களைய ரூ.14 கோடி நிதி வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
* அகில இந்திய அளவில் தென்னை விற்பனைக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும்.
* கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடி விற்பனை செய்யப்படும்.
* உக்கடத்தில்ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.
* குளிரூட்டப்பட்ட மஞ்சள் கிடங்குகள் அமைக்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்தில் 8 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.
* ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* சமுதாய நலக்கூடங்கள் ரூ.11 கோடியில் சீரமைக்கப்படும்.
* உதகை தாவரவியல் பூங்கா உலக தரத்தில் உயர்த்தப்படும்.
* புதிதாக 2 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.
* நான் ஒரு கோப்பில் கையெழுத்திட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
* 10 ஆண்டு ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா?
* கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?
* பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.
* கொடநாடு கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது.
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா விவசாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது?
* அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.
* ஒன்றிய அரசின் உதவி இன்றியே பல சாதனைகளை செய்கிறோம். உதவி இருந்தால் 10 மடங்கு சாதனைகளை செய்வோம்.
* மோடி உத்தரவாதம் என்று கூறுகிறார். வேலைவாய்ப்பு குறித்த அளித்த வாக்குறுதி என்ன ஆனது?
* அடுத்த வாரம் பிரதமர் வரும்போது, அவரிடம் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்.
* எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?
* மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார். பிரதமரின் கட்டுக்கதைகள் எடுபடாது என்று கூறினார்.
- முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்றார்.
- முதலமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது.
விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு சென்றார்.
விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைதொடர்ந்து 4 மாவட்டங்களிலும் 273 முடிவுற்ற திட்டப்பணிகளையும் பொள்ளாச்சியில் இருந்தபடியே காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உள்ளார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி இன்று பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.
- தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நித்தியா நந்தினி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 13-ந் தேதி, இவரது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் வீட்டில் இருந்த நித்யா நந்தினியை கட்டிப்போட்டு, 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையர்கள் பண்ணை வீட்டில் இருந்து செஞ்செரிமலை வழியாக நெகமம் நோக்கி வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அவர்கள் யார் என்பதை அறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

போலீஸ் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன்(72), ஆந்திர மாநிலம் தாவணிக்கரையை சேர்ந்த முருகன்(55), குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த ஏழுமலை என்ற ராஜா(50), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்ற ராஜேஷ்(42) என்பதும், இந்த கும்பலுக்கு தலைவனாக அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன் செயல்பட்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களை தேடி தனிப்படையினர் குடியாத்தம் விரைந்தனர். அங்கு அவர்கள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
சம்பவத்தன்று அவர்கள் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த கும்பல் மோகனூரில் உள்ள ஆந்திர வங்கி, பண்ரூட்டி, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக்கடைகளிலும் ஏராளமான பணம் மற்றும் பல சவரன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இவர்கள் பொள்ளாச்சியில் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் இங்கேயே எங்காவது கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்து, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது பண்ணை வீடு இருப்பதை பார்த்ததும் அங்கு சென்று, அங்கு இருந்தவரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையர்களை பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.
இருந்தபோதிலும் கிடைத்த தகவல்களை வைத்து, கொள்ளையர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து விட்டோம் என்றனர்.
இதையடுத்து போலீசார் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
- தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந்தேதி) கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந் தேதி) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, எரிசக்தி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காவல்துறை, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அயலக தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வு துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இவ்விழாவில், அமைச்சர்கள், கலெக்டர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), பொள்ளாச்சி சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.
- ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர்.
கோவை:
கோவையில் இன்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (55) உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் காமாட்சிபுரி ஆதீனமும் கலந்து கொண்டார். விழாவில் பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பங்கு கொண்டு பிரதமருக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர். சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.
அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.
- இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கூத்தனப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் 3 சிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.35 மணி அளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து ஜல்லிகர்களை ஏற்றிச் செல்வதற்காக கொண்டிருந்த டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது இரவு வேலை முடிந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ்சும் வந்து கொண்டிருந்தது.
அப்போது அனுசோனை கிராமம் அருகே இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பிகார் மாநிலத்தை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் லாலுகுமார் (வயது 36) பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர்களை மீட்டு ஒசூரில் உள்ள தனியார் மருந்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கெலமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
- கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவர்.
- பூண்டி மலைஅடி வாரத்திலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வடவள்ளி:
கோவை மாவட்டம் பூண்டி அருகே பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்து உள்ளது. அடுத்தடுத்த 6 மலைத்தொடர்களை கடந்து சென்றால் தான், 7-வது மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சுயம்பு வடிவ சிவபெருமானை தரிசிக்க முடியும்.
வெள்ளிங்கிரி மலைக்கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்ய வனத்துறையினர் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அனுமதி வழங்குவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி கிரிவலம் சென்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவர்.
இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மூங்கில் தடிகளின் உதவியுடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளிங்கிரி மலையேறி சென்று உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அதிலும் குறிப்பாக மாசி மாத அமாவாசையை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலை உச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது மலர் அலங்காரத்துடன் காட்சியளித்த வெள்ளிங்கிரி ஆண்டவரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பூண்டி மலைஅடி வாரத்திலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே கோவை வீரபாண்டி லட்சுமி நகரை சேர்ந்த கிரண் (வயது 22) என்பவர் நண்பர்கள் சிலருடன் வந்து மலையேறினார். அப்போது 5-வது மலை ஓட்டன் சமாதி அருகே சென்றபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த கிரணை மீட்டு அடிவாரம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிரண் பரிதாபமாக உயிரிழந்தார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
- தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது.
கோவை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்டம் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கைரீதியாக எதிர்கொள்ளும். 3 பேர் அடங்கிய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி விலகிய நிலையில் தற்போது அருண்கோயல் என்பவரும் ராஜினாமா செய்து உள்ளார். எனவே தேர்தல் ஆணையத்தில் தலைவர் மட்டுமே உள்ளார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. இதனை பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கி விட்டார். இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது. மார்ச் 13-ந்தேதிக்குள் யார்-யாருக்கு தேர்தல் பத்திரம் வழங்கப்பட்டு உள்ளது என்பதை வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் எனற சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகும், பாரத ஸ்டேட் வங்கி காலஅவகாசம் கேட்பது சரியல்ல.
கேரளா மாநிலத்தில் இந்தியா கூட்டணி மட்டும் தான் போட்டியிடுகிறது. மூன்றாவது அணி இல்லை. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும், கம்யூனி ஸ்டு சார்பில் ஆனிராஜாவும் போட்டியிடுகிறார்கள். அங்கு ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
- மாற்றத்தை விரும்புபவர்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வாருங்கள்.
கோவை:
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான். ஊழல் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும், தி.மு.க. இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியால் தான் முடியும் என்பதை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி களமிறங்கி இருக்கிறது. அதனை 2024 பாராளுமன்ற தேர்தலில் நடத்திக் காட்டுவோம்.
தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன். எம்.பி.யாக வேண்டும், எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. வருகின்ற காலங்களில் அதனை நீங்கள் பார்ப்பீர்கள்.
2026 சட்டசபை தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அதற்கு தான் எனது முழு கவனமும் உள்ளது. மாற்றத்திற்கான அடித்தளமாக 2026 ஆண்டு இருக்கும்.
நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு எப்போதோ தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம். பாரதிய ஜனதாவை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் சரித்திர தேர்தலாக இருக்கும். இதனை உறுதியாக நம்புகிறோம்.
பாரதிய ஜனதா 25 சதவீத வாக்கு வங்கியை எப்போதோ தாண்டி விட்டோம். 2024 தேர்தலை பாருங்கள். மாற்றத்திற்கான அறிகுறி அதில் இருக்கும். மாற்றத்தை விரும்புபவர்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வாருங்கள். எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வருவோம்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவர் தி.மு.க. பக்கம் போய் இணைந்துள்ளார். இதுபற்றி மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அரசியல் என்பது கடினமான ஒரு வேலை. அதிலும் கொள்கை அரசியல் என்பது இன்னும் கடினமானது. கொள்கையை விடாமல் அந்த கொள்கையிலேயே பயணம் செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமானது. இதனை கடைபிடிக்க முடியாமல் கமல்ஹாசன் தி.மு.க.வோடு இணைந்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிகிறது. இது கமல்ஹாசனின் முடிவு. சினிமாத்துறையில் இந்த அளவுக்கு தி.மு.க.வின் ஆதிக்கம் உள்ளது. கமல்ஹாசன் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி உள்ளார். தி.மு.க. கொடுக்கும் மாநிலங்களவை எம்.பி. சீட்டில் நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றம் செல்ல உள்ளது வேதனையை தருகிறது. நிர்பந்தத்தால் தி.மு.க. நிலைப்பாட்டிற்கு கமல்ஹாசன் சென்றிருப்பது கவலை அளிக்கிறது.
நடிகர்கள் எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நடிகர்கள் எதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். அவர்கள் என்ன சமூக ஆர்வலராக இருக்கிறார்களா, தொண்டு நிறுவனம் நடத்துகிறார்களா அல்லது உங்களை போன்று என்னை போன்று சாமானிய வாழ்க்கை நடத்துகிறார்களா, ரோட்டில் போய் மக்களின் கஷ்டத்தை பார்க்கிறார்களா?
அதனால் நீங்கள் எதற்கெடுத்தாலும் நடிகர்கள் தான் முதலில் பேச வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். நடிகர்கள் ஒரு சிறு வட்டத்துக்குள் வாழ்கிறார்கள். ஒரு கட்டம் போட்டு அந்த கோட்டுக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு தான்.
இன்று சமுதாயத்தில் யார் பணி செய்கிறார்களோ அவர்களது குரல் கம்பீரமாக ஒலிக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் விரும்புகிறார்கள். அதனால் நடிகர்களின் வேலை நடிப்பது. அவர்கள் நடிக்கிறார்கள், பிடித்து இருந்தால் கைதட்டி விட்டு அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கேரளாவில் பிரபல நடிகராக மம்முட்டி இருக்கிறார். அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் அரசியல் வேறு, சினிமா வேறு என்று கூறினார். சினிமாவை கைதட்டி பார்ப்பவர்கள், அரசியலுக்கு வரும்போது கைதட்டுவார்களா என்று தெரியாது. அதனால் ஒதுங்கி இருப்பது நல்லது என்றார். ஆந்திராவிலும் இதைப்போன்று நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர். தற்போது அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். தற்போது அதற்கு கமல்ஹாசன் ஒரு சிறந்த உதாரணம். அரசியல் என்பது முழு நேரம் செய்யக்கூடிய ஒரு பணி. நான் அமெரிக்கா போவேன், சூட்டிங் போவேன். ஓய்வு எடுப்பேன், 4 நாள் அரசியல் செய்வேன் என்பது சாத்தியமில்லா ஒன்று. சமுதாய பிரச்சனைகளுக்கு எல்லாம் அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
தி.மு.க. ஆட்சியில் ஒரு இடத்தில் டெக் பார்க் அமைக்கப் போகிறார்கள் என்றால் அந்த இடம் அருகே அவர்கள் இடம் வாங்கி இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதனால் தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி என்பது கேலிக்கூத்து.
போதைப்பொருளால் கிடைத்த பணத்தின் மூலம் ஜாபர் சாதிக் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து மக்கள் முன் அவர்களை நிறுத்த வேண்டும்.
போதைப்பொருளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம்:
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலைரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அந்தவகையில் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.
இதுதவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலைரெயில்கள் இயக்கப்படும்.
ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரெயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம்பெற்றிருக்குமென தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
- மாலையில் பல்வேறு ஊர்களில் தலைச்சிறந்து விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உலகின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரமான தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக 'தமிழ் தெம்பு' என்னும் மண் சார்ந்த பண்பாட்டு கலை திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 17-ம் தேதி வரை தினமும் நடைபெற உள்ளது.
மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழர்களின் ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழர் வாழ்வியல் கண்காட்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தயம், நாட்டு மாடுகள் கண்காட்சி மற்றும் சந்தை, பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டிணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மாலையில் பல்வேறு ஊர்களில் தலைச்சிறந்து விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முதலாம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் திருப்பூரை சேர்ந்த கலைக் குழுவின் சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இது தவிர விழாவில், கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இரண்டாம் நாளான இன்று மதுரையை சேர்ந்த கலை குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதோடு வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாட்டு மாட்டு சந்தையும், மார்ச் 17 அன்று ரேக்ளா பந்தயமும் நடைபெற உள்ளது.






