என் மலர்
சென்னை
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
- பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
சென்னை :
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனிடையே, தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.
இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 168 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480
01-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480
31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-11-2025- ஒரு கிராம் ரூ.166
01-11-2025- ஒரு கிராம் ரூ.166
31-10-2025- ஒரு கிராம் ரூ.165
30-10-2025- ஒரு கிராம் ரூ.165
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- த.வெ.க. அலுவலகத்தில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் வேளையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் ஒரு குழு சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விஜய் பிரசார வாகனத்தை விரைவில் ஆய்வு செய்து, அதில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் பெயர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்துள்ளனர். விஜய்யின் பிரசார வாகன ஆய்வின்போது, த.வெ.க. அலுவலகத்தில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
- சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி 16-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06111), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06113), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06114), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06119), மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06120), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06127), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி 23-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி 24-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06117), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06118), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதையடுத்து ஓரிரு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை.
- மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று மாவட்ட பொறுப்பாளர்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எஸ்ஐஆர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஐடி பிரிவு பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
- மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம்.
- தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!
ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.
திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்!
ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்நிலையில், SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விஜய் பங்கேற்காதது குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR பற்றியும், அதன் விபரீதத்தை பற்றியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
தேர்தல் வரும் நிலையில், தேர்தல் ஆணையம் செய்யக்கூடிய SIR நடவடிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் விரோதமானது.
குறுக்கு வழியில் வாக்குரிமைகளை பரிப்பதன் மூலம் குடியுரிமையற்றவர்களாக சிறுபான்மையினர்களையும் மற்றவர்களையும் உருவாக்கனும் என்பதுதான் அவர்களுடைய தொலைநோக்கு திட்டம்.
அதற்கு நாம் எந்த விதத்திலம் இடம் கொடுத்துவிடக்கூடாது. சட்டரீதியாக அனைவரும் உச்சநீதிமன்றம் சென்று அவரவர்கள் தனிதனியாக வழக்கு போட வேண்டும்.
அந்த மாதிரி நேரங்களில் திமுக சார்பிலான வழக்கறிஞர்கள் உதவி செய்வார்கள் என்கிற உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார்கள். SIR நடவடிக்கையால் ஏற்படும் விபரீதம் தொடர்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதுபோன்ற மக்களின் முக்கியமான பிரச்சனைகள், மாநிலத்தில் மக்களுடைய வாக்குகள் பறிப்போகும் நிலை நம் கண் எதிரே தெரிகிறது.
இதுபோன்ற கூட்டத்தில் விஜய் கலந்துக்காமல், பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பது அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது.
பாஜக எந்தவிதமான திட்டத்தை கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கழுத்தறுபட்ட வினோத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அச்சிறுப்பாக்கம் வட்டம் மதூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் செல்வராஜ், வினோத், விக்னேஷ், சந்தோஷ்குமார், சேகர் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் வந்த பாதிரி காலனியைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 5 பேர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் தகராறு செய்தனர்.
இது தொடர்பாக பா.ம.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே நேரத்தில் எந்தத் தவறும் செய்யாத பா.ம.க.வினர் மீதும் காவல்துறையினர் பொய்வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இரு தரப்பினரும் அண்மையில் நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டு கடந்த சில நாள்களாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
பா.ம.க. நிர்வாகிகள் 5 பேரும் நேற்று காலை அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுக் கொண்டு இருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் வந்த விஜயகுமாரும் மற்றவர்களும் பா.ம.க.வினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட காவலர்கள் கண் எதிரிலேயே பா.ம.க. நிர்வாகி வினோத் என்பவரை விஜயகுமாரும் மற்றவர்களும் கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயன்றனர். இதில் கழுத்தறுபட்ட வினோத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
வினோத்துக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான், அதில் அவசரம் ஏன்?
- தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:
* மக்களாட்சியின் தலைமையே வாக்குரிமைதான்.
* வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான், அதில் அவசரம் ஏன்?
* தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொள்வதின் உள்நோக்கம் உண்மையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா?
* இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது.
* கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக எழுந்த நியாயமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
* தகுதி உள்ள ஒருவரின் பெயரைக்கூட பட்டியலில் இருந்து நீக்கி விடக்கூடாது.
* சிறப்பு தீவிர திருத்தப்பணி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டும். மேலும் புதிய பிரச்சனைகளை கொண்டுவந்து விடக்கூடாது.
* தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
* நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தர் ஆணையத்திற்கு உள்ளது.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
- உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
SIR நடவடிக்கைக்கு எதிராக இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வை பதிவு செய்த 49 கட்சி தலைவர்களுக்கும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை #ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீனிவாசராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
- புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.






