என் மலர்
சென்னை
- த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
- பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.
த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.
எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது. விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்துள்ளது.
- இந்த மாதம் இயல்பைவிட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் 2 சுற்று மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையை கடந்த மோந்தா புயலால், ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.
வருகிற 7-ந் தேதி வரை வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்க உள்ளது.
8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த மாதம் இயல்பைவிட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே கருத்தை சில தனியார் வானிலை ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், நவம்பரில் (அதாவது இந்த மாதத்தில்) இயல்பைவிட அதிகமாக மழை பெய்யும் என்றும், முதல் பாதியில் வெயில் சுட்டெரித்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.
வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதனைத்தொடர்ந்து 15-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும்.
அதனையடுத்து 4-வது வாரத்தில் அதாவது 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்து, மழைப்பாதிப்பை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
- ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- இனறு காலை மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைந்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கனிமொழி எம்.பி., அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
- திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது.
- பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை.
அதிமுக சார்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள இந்த சமயத்தில், பெண்களை மிகவும் கொச்சையாக, ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை Award-ஆக வழங்கி, அழகு பார்த்துள்ளது அறிவாலயம்.
ஆபாசமாக, அவதூறாக, இன ரீதியாக இழிவுபடுத்தி பேசினால் பெயருக்கு ஒரு நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்கள் சேர்த்து மீண்டும் அதே பதவி வழங்கப்படுவதே திமுக-வின் பார்முலா!
பள்ளி, கல்லூரி, ஏர்போர்ட் வரை எந்த பக்கமும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டின் ஆட்சியைத் தள்ளிய கட்சியான திமுக, இந்த நியமனத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களுக்கு சொல்லவரும் செய்தி ஒன்றுதான்:
திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை.
இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளார்.
- இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது.
- தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் இந்தி தேர்வுக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தேர்வுகளுக்கும் முறையே 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளில் கூட மொழி வேறுபாடு காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17-ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21-ஆம் தேதி ஆங்கிலம், 23-ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25-ஆம் தேதி அறிவியல், 27-ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2-ஆம் தேதி இந்தி, மார்ச் 7-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 21-ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23-ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத்தேர்வை எழுத வேண்டியிருக்கும்.
இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23-ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.
மாறாக, இந்தி பாடத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதிதான் நடைபெறும் என்பதால், அப்பாடத்தைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுக்கும், அறிவியல் தேர்வுக்கும் இடையில் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் அறிவியல் தேர்வுக்கு நன்றாக படிக்க முடியும்.
அதேபோல், இந்தி பாடத் தேர்வுக்கு முந்தைய கணினி அறிவியல் பாடத் தேர்வுக்கு இரு நாள்களும், பிந்தைய சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 4 நாள்களும் இருப்பதால் அந்தப் பாடங்களை அவர்களால் நன்றாக படிக்க முடியும். இந்தித் தேர்வுக்கு இரு நாள் இடைவெளி இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை இரண்டாம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரானது ஆகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார்.
- திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.
2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் மனோஜ் பாண்டியன். எடப்பாடி பழனிசாமி- ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்.
திமுக-வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட போது என்னை அவர் முழு மன தோடு வரவேற்றார். நான் இன்று மாலை எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்.
தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைக்காமல் தமிழகத்தின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளை யும், அதனால் ஏற்படும் சோதனைகளையும் எதிர் கொண்டு தமிழக உரிமை களை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்.
எந்த கொள்கைக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ அதே கொள்கையில் ஜெயலலிதாவும் பயணித்து வந்தார். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை வழி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உணர்வு களை மதிக்காத தலைவராக உள்ளார். பா.ஜனதா கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னவர் பிறகு மீண்டும் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை.
இதுபற்றி தொண்டர்கள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. பா.ஜனதா கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி தி.மு.க.வில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.
திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்.
அ.தி.மு.க.வை தோற்றுவித்த தலைவரும், அம்மாவும் எந்த சூழ்நிலையிலும் கட்சியை அடகு வைக்கவில்லை. ஆனால் இன்றைய அ.தி.மு.க. வேறு ஒரு இயக்கத்தை நம்பி உள்ளது. எனவே நான் எஞ்சிய வாழ்க்கையை தி.மு.க.வில் பயணிக்க முடிவு செய்து உள்ளேன். இது நான் எடுத்த தீர்க்கமான முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் திமுக-வில் இணைந்தது குறித்து வைகைச்செல்வன் கூறியதாவது:-
தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார். திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.
இவ்வாறு வைகைச் செல்வன் தெரிவித்தார்.
- பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்கக் கோரி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தலைமைச்செயலாளர் வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்தது.
பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
மக்களின் பணத்திற்கு அரசு அறங்காவலர்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
சென்னை:
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில், மியான்மார் நகரக்கூடும். பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.
ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
6-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ந்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 மற்றும் 10ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை மத்தியகிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
- சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் 2-வது தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் வீடு, தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு ஆகியவற்றிலும் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தொழில் அதிபர்களின் வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதன் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- தற்போது புதியதாக நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்து தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர்.
- திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனும் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை பொதுச்செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டதால் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தான்.
- கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து 36 மணி நேரம் கழித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவிக்கு நடந்த கொடுமைக்கு தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், இந்தக் கொடுமைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார் முதலமைச்சர். தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொடூர நிகழ்வில் தமது தோல்வியை மூடி மறைக்க முதலமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதும் அரசு மற்றும் காவல்துறையின் அடிப்படைக் கடமைகள் ஆகும். இவற்றைக் கூட செய்ய முடியவில்லை என்றால் ஓர் அரசு அரசாகவும், காவல்துறை காவல்துறையாகவும் இருக்கத் தகுதியற்றவையாகி விடும். எனவே, குற்றவாளிகளை கைது செய்ததையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிட்டிருப்பதையும் சாதனையாகக் கூறி கடமை தவறியதிலிருந்து தப்பிக்க முடியாது.
கோவையில் நடந்திருப்பது, கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய மூன்றாவது பாலியல் வன்கொடுமை ஆகும். கடந்த ஆண்டு திசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும், கடந்த ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இனி இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வந்தது. ஆனால், கோவையில் நடந்த கொடூரத்தைத் தடுக்க தமிழக அரசு தவறியது ஏன்? என்பது தான் பொதுமக்களின் வினா. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறித் தான் ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது , கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். அவற்றின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; அதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது; இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் நான் நேரில் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை. அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளன.
அடுக்குமொழி வசனங்களை பேசுவதன் மூலமாகவும், கோவையில் நடந்த கொடுமையை 'வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலை' என்று கூறி மிகவும் எளிதாக கடந்து போவதன் மூலமாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர் மீது படிந்திருக்கும் கறைகளை துடைத்தெறிய முடியாது. ஆட்சிக் காலத்தின் கடைசி சில மாதங்களிலாவது தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கவும், பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.






