என் மலர்tooltip icon

    சென்னை

    • இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
    • பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    * தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம்.

    * தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். அதனால் தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.

    * மொழியை திணிக்காதீர் என்று சொன்னால் ஆறு அறிவுள்ளோருக்கு புரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு மட்டும் புரியவில்லை. 

    * பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம் என்று கூறியுள்ளார். 

    • முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
    • தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளைப் பார்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.


    • பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
    • பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    கனிமவள கொள்ளையை கண்டித்து வரும் 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும்; தமிழ் நாட்டில் இருப்பதைப் போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாப்பதோடு, தமிழ் நாட்டில் உள்ள கனி வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.

    கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.

    இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதிமுக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
    • அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

    அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வழக்கை சிபிஐயிடம் இருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, வழக்கு விசாரணை தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கோரிக்கை வைத்தது.

    அதன்படி, அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

    அதன்படி, ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் திருச்சி டிஐஜி, தஞ்சை எஸ்பி ஆகியோரை கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
    • திர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

    வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.

    தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.

    2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.

    தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது.

    நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?

    உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

    வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
    • இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.

    இதுகுறித்து தவெகவின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

    வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.

    இதில் கழகத் தலைவர் அவர்கள், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம். ராயப்பேட்டை, சென்னை

    தேதி: 07.03,2025 வெள்ளிக்கிழமை

    நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக மணி 6.24

    மக்ஃரிப் பாங்கு: மாலை, மணி 6.28

    மக்ஃரிப் தொழுகை: மாலை, மணி 6.35 (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)

    மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள்.
    • கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், " இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.

    இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

    கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு மு.க.ஸ்டாலின்?" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?

    தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

    கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம்.
    • சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.

    சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேதங்களின் மூலம் சிந்து நாகரிகம் பெற்ற ஞானம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் மற்றும் அதன் கலாசாரத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும், படைப்பின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் தொடர்ந்து நம்மை ஈர்த்து, நமது தோற்றத்தை தனிப்பட்ட அளவிலும் உலகளவிலும் எவ்வாறு வரையறுத்து வருகின்றன.

    ஆரிய படையெடுப்பு மற்றும் ஆரிய இனம் பற்றிய கோட்பாடுகளை பொய்யாகப் பரப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்தங்களைத் தழுவியவர்கள் உள்பட ஐரோப்பிய காலனியவாதிகள், நீண்ட கால அறிவுசார் மற்றும் அரசியல் வன்முறை துணையுடன் மேற்கொள்ளும் வரலாற்றுத்திரிபுகள் மற்றும் தவறான உள்அர்த்தம் கற்பிக்கும் செயல்பாடுகளில் இருந்து இந்த நாகரிகத்தை பங்கேற்பாளர்கள் மீட்க வேண்டும்.

    செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல், சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது.

    நமது விரிவான தேசிய மறுமலர்ச்சி காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

    அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்தாவது:-

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
    • பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரம் சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

    இதே ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதலும் இருக்காது என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் 2014 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்.

    அதை நிறைவேற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?

    சமீபத்தில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது இலங்கை அரசுக்கு 4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியதையும், இலங்கை அரசின் கடனை சீரமைக்க இந்தியா மேலும் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி கூறினார்.

    இலங்கைக்கு நிதியுதவி செய்கிற பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாரா? ஏன் வைக்கவில்லை?

    2024 தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? இதன்மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.

    எனவே, தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழக கவர்னருக்கோ, மத்திய பா.ஜ.க. அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி கவர்னர் ஆர்.என். ரவியும், பா.ஜ.க.வினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை.
    • பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, 12,170 வழக்குகள் நிலுவை- பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு, அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்கப்படாதது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டு உண்மை தான் என்று நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மொத்தம் 21,672 வழக்குகள் போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு, 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்த நிலையில், அவற்றில் 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

    30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தவிர 12 ஆயிரத்து 170 வழக்குகள், அதாவது 60% வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஓராண்டுக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும் தான். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் 100-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளனவோ, அங்கெல்லாம் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்; 300-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை 20 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளன. இது தேவையான நீதிமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான்.

    தென்காசி மாவட்டத்தில் புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை அங்கு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கான போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்காண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்குத் தான் அக்கறை காட்டுகிறது.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

    அதன்பின் அந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    அவ்வாறு குற்றவாளிகள் தப்பி விடுவதால் தான் குற்றவாளிகள் மத்தியில் அச்சம் குறைந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.

    பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் அக்கறை காட்டும் அழகு இது தானா?

    பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும்.

    அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் தேவையான எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது.
    • மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எந்த தேர்தலிலும் களம் கானாத பல கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது. இதனால் இந்த கூட்டத்துக்கு தடை வதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×