என் மலர்
சென்னை
- சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையாகியிருந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை.
பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநரை சந்திக்கிறார். அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்றார்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.யுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றார்.
மேலும், கூட்டத்தில் திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
வணக்கம், குணசேகரன் அண்ணா உங்களுக்குத்தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படவேண்டியதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு. குணசேகரன் அண்ணா உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்.
நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற வார்டுக்குள் இன்றைக்கு நீங்க எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 484 வாக்கு பா.ஜ.க. வாங்குகிறது. இதுக்கு என்ன சொல்றீங்க? நீங்கள் தோற்றதுக்கும், பேசுறதுக்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிக்கிறீர்கள். இது நல்லது இல்லைங்க அண்ணா... நீங்க தோற்றதுக்கு காரணம் பா.ஜ.க.வா? 3 முறை வெற்றி பெற்ற இடத்தில் ஏன் தோற்றீர்கள்? என்ன காரணம்? பா.ஜ.க. இல்லாததால் என்றார்.
- காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.
அதுவும், "பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது" எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
- தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
- மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநில சுயாட்சி தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம்.
- நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநில சுயாட்சி தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம்.
* அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர், அவ்வியக்கத்தை வழிநடத்திய ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி என்னதான் தி.மு.க.விற்கும், அவர்களுக்கும் மாற்று கருத்து, மாறுபாடு, வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு தரமுடியாது என்கிற நிலைமையில் இருந்து பல கோரிக்கைகளை ஆதரித்து இருக்கிறார்கள்.
* ஆனால் இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று புரியலை. ஆனா அது நமக்கு புரியும். பேசும்போது சொல்வார்கள் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வார்கள். அதைத்தான் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
* இதுதான் கொள்கையா? அந்த கேள்வியைத்தான் கேட்க வேண்டி இருக்கிறது.
* எனவே தமிழ்நாட்டினுடைய நன்மையை கருதி, அதன் உரிமையை கருதி, நமக்கு இருக்கக்கூடிய சுயாட்சியை கருதி நான் அவர்களுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை, தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்த பணியை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் நன்றி கூறி அமர்கிறேன். நன்றி. வணக்கம்.
- தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது.
- தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மாநிலங்களுக்கான அதிகாரம் பற்றிய 110-வது விதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் வெளிநடப்பு செய்தார்கள்.
பின்னர் பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன் கூறும்போது, "தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இனியும் அது போன்று தான் செய்வார்கள். இதனால் தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது" என்றார்.
பின்னர் அவரிடம், நீங்கள் மாநில தலைவராகி இருப்பதால் பா.ஜ.க. சட்டசபை தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஒருவரிடம் பதவிகள் இல்லாமல் பிரித்து கொடுக்கப்பட்டால் நல்லது தானே" என்றார்.
- வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோ எம்.பி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தொகுதியில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் மேலும் சில மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். கழக கட்டுப்பாட்டுக்கு எதிராக மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். இந்த விவகாரத்துக்கு நிர்வாகக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.
அதேநேரம் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் எனது பாரம்பரியம் என்பது வைகோ பாரம்பரியம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒருபோதும் வரக்கூடாது என்ற உறுதியோடு ம.தி.மு.க.வில் பயணிக்கிறேன்.
வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த சிக்கலுக்கு 20-ந்தேதி வைகோ எப்படி தீர்வு காணப்போகிறார் என்பதே ம.தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், மாநில சுயாட்சி குறித்து தி.மு.க. அரசுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளதால் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.
மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தபோது பேசியிருந்தால் மக்கள் நம்புவார்கள், இதுமுழுவதும் ஏமாற்று வேலை என்றார்.
- ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடிக்க தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
சென்னை:
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். எனவே இந்த கால கட்டங்களில் எந்திரப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி அழிந்து விடும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக நாள டைவில் தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குறையும் நிலை ஏற்பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு தமிழக கடலோர பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு எந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்வது தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு செல்லவில்லை.

தங்களது எந்திர படகுகளை மீனவர்கள் தாங்கள் வழக்கமாக நிறுத்தும் பகுதிகளில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மொத்தம் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த 61 நாட்களும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் எந்திர படகுகளில் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இது குறித்து சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுக உதவி இயக்குனர் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு இன்று அதிகாலை முதல் எந்த ஒரு எந்திரப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை.
சென்னை காசிமேடு துறை முகத்தில் மட்டும் சுமார் 1,100 எந்திரப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத் தம் உள்ள 4,500 எந்திரப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4 ஆயிரம் எந்திரப் படகுகளும் இயங்காது.
இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டுப் படகுகள் ஆந்திர பகுதிக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் எந்திரப் படகுகளில் மட்டுமே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழை படகுகள் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனைத்து வகை படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் எந்த வகை படகாக இருந்தாலும் ஆந்திர கடல் பகுதிக்கு சென்று நட வடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம். அவ்வாறு தடையை மீறி சென்றால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு படகு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் உத்தரவுகளை மீறி செயல்படும் படகுகளின் மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். அதை மீறிக் கடலுக்குச் சென்றால் மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே விதிமுறைகளை மீனவர்கள் மீறிச் செயல்படக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்கி இருப்பதால் வழக்கம் போல உணவுக்கு மீன்கள் கிடைக்காது. கடலோரப் பகுதிகளில் சாதாரண படகுகளில் சென்று வலைவீசி பிடிக்கும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.
இதன் காரணமாக மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதையடுத்து மீன்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தருவைகுளம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின.
இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தேசியக் கல்வி கொள்கையை ஏற்காததால் ரூ.2,500 கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை.
* கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது.
* மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மருத்துவ கல்வி கொள்கையை நீர்த்துப் போக செய்துவிட்டது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்துள்ளது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது தமிழக அரசுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
* மாநில அரசுகளின் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளது.
* மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது.
* கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் நலனை மட்டுமே முதன்மையாக கொள்கிறது திராவிட மாடல் அரசு
* நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது கவர்னர் காலம் தாழ்த்திய விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
* மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும்.
* உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.
- மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
சென்னை:
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.
தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. முதலமைச்சர்கள் கொடியேற்றுவது தொடங்கி மாநில உரிமைகளை தி.மு.க. பல சமயங்களில் நிலைநாட்டியதோடு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக தொடர்ச்சியாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.
நீட் விவகாரம், மும்மொழிக்கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், திட்டங்கள் என பல வகைகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் விமர்சனங்கள் வைத்துள்ளார். மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களிலும் மத்திய அரசு கைவைப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படவிடாமல் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு போட்டி அரசு நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்காத நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கவர்னரின் செயல் சட்ட விரோதம் என அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், கவர்னர்களுக்கு காலக்கெடுவும் விதித்தது.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழ் இனத்தையும் உயர்த்த முடியும். இதனை உறுதி செய்திடும் வகையில் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று தகவல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. அப்போது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசு அதை ஏற்கவில்லை. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நீர் தேர்வை அமல்படுத்துவதன் மூலம் கல்வி கொள்கை முழுவதையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு பொதுவாகவே நிதி குறைவாகவே பகிரப்படுகிறது. மாநில அரசுக்கு இத்தகைய காரணங்களால் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
அதன்பிறகு ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் இதன் மீது பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெ டுப்புக்குப் பிறகு அது நிறைவேறியது.
மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் இந்திய அளவில் எழுந்துள்ள நிலையில் முதல்-அமைச்ச ரின் இந்த கோரிக்கை முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு அ.தி.மு.க. நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உள்ள சிறுபான்மையின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சற்று அதிருப்தி அடைந்து உள்ளனர்.
அவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும் போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும்என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளையும் இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழக செயலாளர்க்ள, மாவட்டக் கழக செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிததோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






