என் மலர்tooltip icon

    சென்னை

    • ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும்.
    • ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

    காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். 

    • அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்குமார் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதலும் தெரிவித்தும் உள்ளனர்.

    இதனிடையே, நேற்று முன்தினம் அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயாரிடம் த.வெ.க. துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நாளை மறுநாள் சென்னை சிவானந்தா சாலையில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கிடைக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.
    • பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்போரூர் பேரூராட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியில், மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம், தற்போதைய விடியா திமுக ஆட்சியில், படவட்டம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வந்த திருப்போரூர் அரசு மருத்துவமனையில், தற்போதைய கையாலாகாத விடியா திமுக ஆட்சியில், மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் எக்ஸ்ரே மெஷின் சரியாக செயல்படுவதில்லை. அதே போல், ஸ்கேன் வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    பழைய மாமல்லபுரம் சாலை-கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் திருப்போரூர்-நெம்மேலி சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை ஒருவழி சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இங்கு நான்குவழிச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

    திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 150 ஆண்டுகாலம் பழமையான அலுவலகம் என்பதாலும், போதுமான இடவசதி இல்லாத காரணத்தாலும், பத்திரப் பதிவுக்கு வருகைதரும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

    மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும்; மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்தும்; ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை வழங்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், திருப்போரூர்

    பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 360 ரூபாயும், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,050 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520

    01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320

    29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-07-2025- ஒரு கிராம் ரூ.121

    02-07-2025- ஒரு கிராம் ரூ.120

    01-07-2025- ஒரு கிராம் ரூ.120

    30-06-2025- ஒரு கிராம் ரூ.119

    29-06-2025- ஒரு கிராம் ரூ.119

    • காந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
    • கைதானவர்களிடம் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    சென்னை :

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள கெவினின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அடுக்குமாடி குடியிருப்பு, VOC தெரு, SV நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோவில் தெரு, பாலாஜி தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1வது, 2வது தெரு, TKC தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, ராஜ்ஸ்ட்மான் தெரு, காந்தி தெரு, பெருமாள் புரம், வெங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்எஸ்ஆர் நகர், கண்ணன்வென்யூ 1 முதல் 5வது தெரு, மாடம்பாக்கம் மெயின் ரோடு, கோகுல் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, வெங்கடாசலபதி தெரு, மூர்த்தி காலனி, கிருஷ்ணராஜ் நகர், அருள்நெறி நகர் மற்றும் சங்கரா பள்ளி.

    பல்லாவரம் : மூசாத்தி தெரு, ஹசன் பாஷா தெரு, யாசின் கான் தெரு, கைலார் தெரு, முத்துசா தெரு, செல்லம்மாள் தெரு, மீனாட்சி நகர் 1 முதல் 10வது தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, கலாதரன் தெரு, செயலக காலனி, கட்டபொம்மன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கஸ்தூரி நகரி பாய் தெரு, ஏ. சுபம் நகர், யாதவள் தெரு, அம்மன் நகர், மூவர்சம்பேட்டை மெயின் ரோடு, ராஜீவ் காந்தி தெரு, ஆஞ்சநேயர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு.

    திருநீர்மலை: தேரடி தெரு, கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒயிலியம்மன் கோவில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டுத் தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, ஸ்ரீனிவாசன் ராம் தெரு.

    ஐடி காரிடார் : MCN நகர் மற்றும் Extn, பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, SBI காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, ஆனந்த் நகர், காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, ராமன் நகர், ஸ்ரீபுரம் சாலை மற்றும் எல்லையம்மன் நகர்.

    திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதாளம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மென்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட், குமரன் நகர், குன்றத்தூர், மகாலட்சுமி அபார்ட்மென்ட். கலைமகள் நகர், கற்பகம் நகர்.

    கோயம்பேடு மார்க்கெட்: ரெட்டி தெரு, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்தி நகர், சி பிளாக் காவியா கார்டன், கிருஷ்ணா நகர், அகத்தியர் நகர், அம்பிகா நகர், விஜிபி, அமுதா நகர், பிஎச் சாலை, ராஜீவ் காந்தி தெரு.

    • 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்.
    • கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது.

    கட்சியின் தலைவர் விஜய் 11 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்.

    த.வெ.க. சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க.வின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.

    • வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
    • கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, அவரது கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன்ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
    • தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.

    அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ் குமார் அவர்கள், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, "தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்" என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்!

    தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற ’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழா.
    • சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு 'தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்' என்று சொல்லக்கூடிய 'டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்' (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் 'டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2' (Divine Miracles and Secrets - Part 2) புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், 'யோகா - பாகம் 1' (Yoga - Part 1) புத்தகம் மற்றும் 'சுக ஞானநந்தம்' (Suga Gnananantham) இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஜீரூல் அமீன், பிரபல திரைப்பட நடிகர் ராமகிருஷ்ணா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும், திரைப்படத்துறை, தொழில்துறை, விளையாட்டுத்துறை, விவசாயத்துறை, சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் என சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்தது என கிருஷ்ணா தரப்பும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

    இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×