என் மலர்
சென்னை
- சென்னை மாநகர போலீசார் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளைப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட் டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு, சென்னை ஐகோர்டு, விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் என பிரபலங்களின் வீடுகளுக்கும் முக்கிய இடங்களுக்கும் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளைப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் வீட்டில் குண்டு வைக்கப் பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள அன்புமணியின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னாள் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று இரவு மட்டும் சென்னையில் கவர்னர் மாளிகை, அண்ணா சாலையில் உள்ள தர்கா, (தூதரக அலுவலகங்கள் என சுமார் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுருக்கிறது, இந்த மிரட்டல் பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். பரபரப்பான அண்ணா சாலையில் உள்ள தர்காவிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இப்படி தொடர்ச்சியாக போலீசாரை அலைக்கழித்து வரும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் எங்கு இருக்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது.
- தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
* தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 22-ந்தேதி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 23-ந்தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* வரும் 24-ந்தேதி 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 25-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 21-ந்தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய உள்ளது.
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தீபாவளி தினத்திலும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேலும் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தீபாவளி நாளில் இருந்தே சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அடுத்த 2 வாரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதன் பின்னர் வருகிற 27-ந்தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அந்தமான் கடல் பகுதியில் உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந்தேதி அன்று தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுவதற்கான சூழல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற 21-ந்தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய உள்ளது. இது 22-ந்தேதியில் இருந்து 25-ந்தேதிக்குள் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இரண்டாம் சுற்று பருவமழை தீவிரமடையும்.
சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான வடகடலோர பகுதிகள், காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். வடதமிழகம், காவிரி டெல்டா பகுதிகள், தென்மாவட்டங்கள் ஆகியவற்றிலும் பருவமழை படிப்படியாக தீவிரம் அடையும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், பக்கத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இப்படி வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
- நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
- துன்பங்கள் கரைந்து ஒளி மயமான எதிர்காலம் பிறக்கட்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளி மயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் டாக்டர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு மண்பாண்ட குலாலர் சங்கம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தை நூம்பல் பகுதியில் புலியம்பேடு பகுதிக்கு மாற்ற திமுக அரசு முடிவு செய்திருக்கிறது.
- மருத்துவமனைகள் மக்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை அடுத்த திருவேற்காடு காடுவெட்டி பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இட மாற்றம் என்ற பெயரில் மூடுவிழா நடத்த தமிழக அரசு துடிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட முயல்வது கண்டிக்கத்தக்கது.
காடுவெட்டி பகுதியில் 1967-ஆம் ஆண்டில் அரசு மகப்பேறு மையமாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ மையம், 2013ல் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. திருவேற்காடு நகரம், அதைச் சுற்றியுள்ள சுந்தர சோழபுரம், காடுவெட்டி, கண்ணப்பாளையம், வீரராகவபுரம், கோலடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தால் பயனடைந்து வருகின்றன.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நூம்பல் பகுதியில் புலியம்பேடு பகுதிக்கு மாற்ற திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மக்களிடமிருந்து பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது. காடுவெட்டி பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், அதை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் நோக்குடன் 2022-ஆம் ஆண்டில் ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியைக் கொண்டு காடுவெட்டி பகுதியிலேயே ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தியிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது
ஆனால், அதற்கு பதிலாக நூம்பல் புலியம்பேடு பகுதியில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுவது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். காடுவெட்டி பகுதி ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் மருத்துவமனைக்கு எளிதாக வந்து செல்ல முடிகிறது. ஆனால், புதிதாக அமைக்கப்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 7 கி.மீ தொலைவில் அமைக்கப்படுகிறது. அங்கு செல்ல போக்குவரத்து வசதியும் இல்லை; சாலை வசதியும் இல்லை. இத்தகைய சூழலில் திருவேற்காடு மக்கள் அங்கு சென்று மருத்துவம் பெற இயலாது.
மருத்துவமனைகள் மக்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். எனவே, காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். நூம்பல் புலியம்பேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அந்த நிலையத்திற்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 32 மெட்ரோ பங்கேற்ற ஆய்வில் 6,500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோவுக்கான வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5க்கு 4.3 என அறிக்கையில் தகவல்
உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "COMET (Community of Metros)" என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர். இதன் மூலம் செயல்பாடுகள் அளவிடப்பட்டு, சர்வதேசத் தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பீடு, உறுப்பினர்களாக உள்ள மெட்ரோ இரயில் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை (best practices)அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality),அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability),நம்பகத்தன்மை (reliability), பாதுகாப்பு (security),பயன்படுத்துவதற்கான எளிமை (ease of use) மற்றும் சௌகரியம் (comfort) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ இரயில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்புகள் மற்றும் சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
● பெரும்பாலான சென்னை மெட்ரோ இரயில் பயணிகள் பணி நிமித்தமாக மெட்ரோவைப் பயன்படுத்துகின்றனர்.
● இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் சுமார் 64% பேர் ஆண்கள், 33% பேர் பெண்கள் மற்றும் 3% பேர் மற்றவர்கள் ஆவர்.
● பதிலளித்தவர்களில் பெரும்பாலான பயணிகள் இளம் வயதினர் (30 வயதுக்குட்பட்டவர்கள்).
● பயணிகள், கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, மெட்ரோ நிலையங்களுக்கிடையேயான இணைப்பு வசதி (Interchange facility) மற்றும் நிலையங்களை எளிதாக அணுகும் வசதி (Station accessibility)ஆகியவற்றில் மேம்பாடுகளை எதிர்பார்க்கின்றனர்.
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியான மேம்பாடுகளைச் செய்ய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- 17-ந்தேதி இயக்கப்பட்ட 4,067 பஸ்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 565 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் கடந்த 3 நாட்களாக மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 16-ந்தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர்.
17-ந்தேதி இயக்கப்பட்ட 4,067 பஸ்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 565 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று இயக்கப்பட்ட 4 ஆயிரத்து 926 பஸ்கள் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 152 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பஸ்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 922 பேர் பயணம் செய்துள்ளனர்.
- பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
- பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பதுடன், மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார வினியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்யவும், மாநில அளவில் மின்சார தளவாடப்பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும்போது, உடனடியாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், மின்சார வாரிய அலுவலர்கள் தலைமையிலான களப்பணி குழுக்கள், தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார்நிலை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மின்தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் டி.சிவக்குமார், இயக்குநர்கள் ஏ.செல்லக்குமார் (பகிர்மானம்), ஏ,கிருஷ்ணவேல் (இயக்கம்) மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
சென்னை:
பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.
பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது.
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. அதிலும் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், சில இடங்களில் கனமழையும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
- ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், "அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.
நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ.20 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம்.
இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






