என் மலர்
சென்னை
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
- டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
- டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 170 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு 90, காரைக்காலுக்கு 120, புதுவைக்கு 90 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மேலும்,டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல்.
- சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை கடற்கரை பகுதியில் வடக்கு நோக்கி நகர வாய்ப்பு.
- வேதாரண்யத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம்.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 7 கி.மீ வேகத்தில நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் வேகம் 6 மணிநேரத்தில் 7 கி.மீ ஆக குறைந்து நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் 24 மணிநேரத்தில் வடதமிழ்நாடு, புதுவை கடற்கரை பகுதியில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் வடக்கு நோக்கி நகரும்போது தமிழ்நாடு- புதுவை கடற்கரையில் குறைந்தது 30 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
வேதாரண்யத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூருக்கு 100, காரைக்காலுக்கு 110, புதுவைக்கு 100, புதுவைக்கு 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
- திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. சென்னையின் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் 180 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் உள்ளது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தரைக்காற்று 60 - 70 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது.
- ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் 113, பெண்கள் 60, குழந்தைகள் 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
- சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
'டிட்வா' புயலைக் கருத்தில் கொண்டு, பயணி கள் மற்றும் ரெயில்வே கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் விரிவான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. இதற்காகக் கோட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, பெரம்பூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.
வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
அனைத்து அதிகாரிகளும் தங்களது தலைமையகத்தில் இருக்கவும், குறுகிய அறிவிப்பில் பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க, சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு மற்றும் ஜோலார்பேட்டையில் விபத்து நிவாரண ரெயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
மின் இணைப்புகளைச் சரிசெய்யப் பணியாளர்களுடன் கூடிய 'டவர் வேகன்கள்' மற்றும் அவசரத் தேவைக்காக டீசல் என்ஜின்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான டீசல் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர் சேதத்தைத் தடுப்பதே எங்களின் முதல் முன்னுரிமை என்று, சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை.
- காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டிட்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நன்றாக வளர்ந்து கதிர் வைக்கும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் உழவர்கள் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர்.
பருவமழையில் பயிர்கள் சேதமடைவதால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முறை பருவமழையால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருமுறை கூட அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை; பல முறை அவர்களுக்கு இழப்பீடே வழங்கப்படவில்லை. ஏனோ அந்த அளவுக்கு உழவர்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.
நடப்பாண்டின் நிலை இதுவென்றால், கடந்த ஆண்டின் நிலைமை இன்னும் மோசமாகும். காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்த பிறகும் கூட பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.39, ரூ.52, ரூ.90 என நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வாரி வழங்கிய பெருமை திமுக ஆட்சியாளர்களுக்கு உண்டு. தமிழ்நாடு கடுமையான வறட்சியைச் சந்தித்த காலத்தில் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட இந்த திமுக ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அதைப் பற்றி திமுக அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை.
கடந்த ஆண்டுகளிலும், நடப்பு வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலும் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் உழவர்களை ஏமாற்றிய திமுக அரசு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்யக்கூடாது. டிட்வா புயல் - மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
- பொதுமக்களின் விண்ணப்பங்களை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4-ந்தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ந்தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ந்தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.
- வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது புயலின் வேகம் அதிகரித்து 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக நகர வாய்ப்பு உள்ளது. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் முறையே 60 கி.மீ. மற்றும் 30 கி.மீ. தூரத்தில் மையம் கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக எதிர்பார்த்த மழை பெய்யாதது ஏன்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* டிட்வா புயல் இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.
* இலங்கையில் இருந்து வெளியே கடல் பகுதிக்கு வந்த பிறகு வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.
* வறண்ட காற்றின் ஊடுருவல் மற்றும் காற்று முறிவே மழை குறைந்ததற்கு காரணம்.
* தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். இருந்த போதிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது.
- நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல்.
சென்னை:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் 'லோக் பவன்' என்பது தமிழில் 'மக்கள் பவன்' என்று பொருள்படும். இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர் பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.
நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
- 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* கடலூர், விழுப்புரம், சென்னையில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்த்தோம்.
* புயல் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை.
* இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கிறது.
* இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
* தற்போது பெய்த மழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
* தூத்துக்குடி, தஞ்சையில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.
* மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
* தமிழகத்தில் பெய்த மழையால் 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
* புயலின் தாக்கம் குறித்து மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும்.
* 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






