என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்களுக்கான நவீன இலவச கருத்தடை சாதனம் அறிமுகம்
    X

    பெண்களுக்கான நவீன இலவச கருத்தடை சாதனம் அறிமுகம்

    • சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பாக, பெண்களுக்கான 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' என்ற அதிநவீன கருத்தடை சாதனம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஜோஸ்பின் ஹேமா, டாக்டர்கள் சித்ராதேவி, ஜெயந்தி பிரசாத். மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சாதனத்தின் செயல்பாடுகள் குறித்து குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நடராஜன், மகப்பேறு சிகிச்சை பிரிவு தலைவர் காயத்ரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு சாதனம். கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி போன்ற மருத்துவ முறைகளை காட்டிலும் இது பெண்களுக்கு பாதுகாப்பானது, வசதியானது.

    இது தீக்குச்சி போன்று 3 செ.மீ நீளம் கொண்டது. வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் இந்த சாதனம் பொருத்தப்படுகிறது. தீக்குச்சி வடிவில் இருப்பதால், தோலுக்கு அடியில் செலுத்தும்போது கையில் இருப்பது தெரியாததுபோல் இருக்கும். இதனால், எந்தவித பாதிப்பும் வராது.

    இந்த அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறை செலுத்தினால் போதும். அதில் உள்ள மருந்து தினசரி உடலில் வெளியாகி கரு உருவாதலை தடுக்கும். இதன் மூலம் பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கர்ப்பத்தைத் தடுக்க முடியும். ஒரு வருடம் கழிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், உடனடியாக அதனை வெளியே எடுத்துவிடலாம்.

    குழந்தை பெற்று கொண்ட பெண்களுக்குதான் இது செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பும் வராது. 18 வயது முதல் 45 வரை உள்ள பெண்களுக்கு இது பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.3 ஆயிரம். அரசு அஸ்பத்திரியில் உள்ள பெண் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உடம்பில் அந்த சாதனம் இருப்பது போன்று தெரியாது. எந்தவித தொந்தரவு, அசவுகரியமும் இருக்காது. நமது அன்றாட பணிகளை செய்ய முடியும். குறிப்பாக, இதய நோய் உள்ளிட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 3 வருடங்கள் கடந்துவிட்டால், அதனை எடுத்து விட்டு புதிதாக வேறு ஒன்றை பொருத்தி கொள்ளலாம்.

    இதனை நோயாளிகளுக்கு பொருத்துவது குறித்து அரசு டாக்டர்களுக்கும். தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 72 சாதனம் கையிருப்பு உள்ளது. தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாக அரசிடம் கேட்டு பெற்று கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×