search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே ஒற்றை யானை அட்டகாசம் -பனை, தென்னை மரங்கள் நாசம்
    X

    களக்காடு அருகே காட்டு யானை சாய்த்த தென்னை மரம்.

    களக்காடு அருகே ஒற்றை யானை அட்டகாசம் -பனை, தென்னை மரங்கள் நாசம்

    • மலையடிவார பகுதிகளீல் கடந்த 3 மாதங்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது.
    • ஒற்றை யானையால் விவசாயிகளின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில் உள்ள சிதம்பரபுரம், சிவபுரம், கள்ளியாறு பகுதிகளீல் கடந்த 3 மாதங்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது.

    அட்டகாசம்

    வனப்பகுதியில் இருந்து, இடம்பெயர்ந்து வந்த ஒற்றை யானை, மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்து இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவில் களக்காடு கள்ளியாறு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள ஒய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி அசோக் கென்னடியின் மகன் கெனி டேவிஸ் என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 2 தென்னை, 1 பனை மரத்தை வேருடன் சாய்த்து அட்டகாசம் செய்தது.

    யானை சத்தத்தை கேட்டு வந்த விவசாயிகள் தீப்பந்தங்கள் கொளுத்தி யானையை விரட்டினர். இதுபோல சிதம்பரபுரம் சத்திரங்காடு பகுதியில் புகுந்த யானை விவசாயிகள் சந்திரசேகர், மகேஷ் ஆகியோரது விளைநிலங்களுக்குள் சென்று, பனம் பழங்களை தின்று நாசம் செய்துள்ளது.

    விவசாயிகள் அச்சம்

    பிறகு மலையடிவார புதர்களுக்குள் சென்று விட்டது. இதுபற்றி நெல்லை மாவட்ட பா.ஜ.விவசாய அணி தலைவர் சேர்மன் துரை கூறியதாவது:-

    யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாயிகளின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

    யானை அட்டகாசம் குறித்து வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தும் வனத்துறையினர் யனையை விரட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×