search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மாதவரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை- மதுபாட்டிலால் குத்தி கொன்ற ரவுடி கைது

    மாதவரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பால்பண்ணை 4 வது யூனிட் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 34).

    இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மோகன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உறவினர்களான‌ அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 38), திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெபா (எ) ஜெயகுமார் (வயது 34) மற்றும் சில நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

    அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் பிரபுவும் ஜெயகுமாரும் மது பாட்டிலால் மோகனை கடுமையாக தாக்கி குத்தினர். இதில் மோகன் மயங்கினார். பின்னர் அனைவரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மணலி சின்னசாமி நகரில் வசிக்கும் மோகனின் அண்ணன் செந்தில், மோகனை பார்க்க நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சுயநினைவு இன்றி இருந்த மோகனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, மாதவரம் பால்பண்ணை போலீசார் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மோகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரபுவும், ஜெயக்குமாரும் மதுபாட்டிலால் குத்தியதில் மோகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபு, ஜெயக்குமார் இருவரையும் கைது செய்தனர். இவர்களில் ஜெயக்குமார் ரவுடி என்றும் அவர் மீது வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×