search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    மெரினா கடற்கரையை போதை பொருட்கள் மையமாக மாற்றுவதா? ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருப்பது தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் சாராய பாட்டில்கள் உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, இரவு நேரத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் வந்த நிலையில், இன்று காவல் துறையினர் நடத்திய விசாரணையில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமாக விளங்கும் மெரினா கடற்கரையில், சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் மெரினா கடற்கரையில், இதுபோன்ற பதுக்கல் நடைபெறுகிறது என்றால், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் என்ன நிலவுகிறதோ என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருப்பது தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    முந்தைய தி.மு.க. ஆட்சியில் இருந்ததைப் போன்று கூடுதல் அதிகார மையங்கள் செயல்படுகின்றனவோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ள தி.மு.க. அரசிற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மெரினா கடற்கரை

    மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சாராய பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமானவையா அல்லது கள்ளச்சாராயம் காய்ச்சி பாட்டில்களில் நிரப்பி தனியாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறதா என்பதையும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் மடைமாற்றி விடப்படுகிறதா என்பதையும் காவல் துறையினர் தீர விசாரித்து, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் ஆகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு நடைபெறுகின்றன என்பதை கண்டறிந்து, இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×