search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பாளையம் பகுதியில் தொழிலாளர்கள் உருண்டை வெல்லம் தயாரித்த போது எடுத்த படம்.
    X
    சாணார்பாளையம் பகுதியில் தொழிலாளர்கள் உருண்டை வெல்லம் தயாரித்த போது எடுத்த படம்.

    கபிலர்மலை பகுதிகளில் வெல்லம் விலை தொடர்ந்து வீழ்ச்சி

    கபிலர்மலை பகுதிகளில் வெல்லம் விலை தொடர்ந்து வீழ்ச்சி விவசாயிகள் கவலையடைந்தனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பெரிய மருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், செல்லப்பம்பாளையம், அண்ணா நகர், கொத்தமங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், மாரப்பம்பாளையம், ஜமீன் இளம் பள்ளி, குறும்பலமகாதேவி, அரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

     வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயாரிக்கின்றனர். பின்னர் வெல்லங்களை நன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,170-க்கும், அச்சுவெல்லம் ரூ1,170-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150க்கு விற்பனையானது. 

    வெல்லத்தின் தேவை குறைவால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×