search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு ஆறுதல் கூறி நிவாரணத்திற்கான  காசோலை வழங்கிய காட்சி.
    X
    காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு ஆறுதல் கூறி நிவாரணத்திற்கான காசோலை வழங்கிய காட்சி.

    மரம் விழுந்து உயிரிழந்த 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    நெல்லை அருகே மரம் விழுந்து உயிரிழந்த 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை பத்தமடை குளத்துக்கரை பகுதியில் விரிவாக்க பணியின்போது சாலையோர மரம் ஆட்டோ மீது விழுந்ததில் அதில் பயணம் செய்த பத்தமடை பள்ளிவாசல் 5-வது வடக்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காதர் மைதீன்(வயது 35), கவர்னர் தெருவை சேர்ந்த மைதீன் பட்டாணி மனைவி ரகுமத் பீவி(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    அதில் இருந்த காதர் மைதீன் மனைவி பக்கீராள் பானு(32), மகன் ஷேக் மன்சூர், ரகுமத் பீவியின் மகள் அபிதா பாத்திமா(6) ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

    இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சேரன்மகாதேவி ரவுண்டானாவில் 4 புறங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிந்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்ைத நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக போலீசார், பொக்லைன் ஆப்ரேட்டர், ஒப்பந்ததாரர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனாலும் கூடுதல் நிவாரணம் வழங்கவேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று கூறி இன்று 2-வது நாளாக அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பலியானவர்கள் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரணநிதி தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் விஷ்ணு நெல்லை அரசு மருத்துவமனையில் பலியானவரின் உறவினர்களிடம் வழங்கினார்.

     மேலும் காயம் அடைந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
     
     உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் கூறினார்.  அப்போது சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உடன் இருந்தனர்.
    அதன்பின்னர் பலியானவர்களின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
    Next Story
    ×