search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீல்
    X
    சீல்

    கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 18 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

    கடந்த 8 மாதங்களாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் இருந்து ரூ. 7 லட்சத்து 45ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பை மற்றும் 60கிராம் அளவிற்கு நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறத்தாழ 4 ஆயிரம் கடைகளில் காய்கறி, பூ, பழம் மற்றும் மளிகை பொருட்கள் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த அங்காடி நிர்வாக குழு தடை விதித்துள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அங்காடி நிர்வாக குழு, மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் ஏற்கனவே வியாபாரிகளுக்கு பல்வேறு கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. ஆனாலும் அரசின் அறிவுறுத்தல்களை மீறி மார்க்கெட் வளாகத்தில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்காடி நிர்வாக குழு அதிகாரி சாந்திக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் வியாபாரிகளை கண்காணிக்க 5 நபர்கள் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. காய்கறி மார்க்கெட்டில் 3 குழுக்கள் மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் தலா ஒரு குழு மூலம் தீவிர ரோந்து பணி நடந்தது.

    அப்போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளை கண்டறிந்து ரூ. 5ஆயிரம் அபராதம் வசூலித்ததோடு பிளாஸ்டிக் பைகளையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

    கடந்த 8 மாதங்களாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் இருந்து ரூ. 7 லட்சத்து 45ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அபராதம் வசூலித்து எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வந்த பூ மற்றும் காய்கறி மார்கெட்டில் உள்ள 18 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் அந்த கடைகளின் உரிமம் 3மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அங்காடி நிர்வாக குழு அதிகாரி சாந்தி கூறியதாவது:-

    கடந்த 6 மாதங்களில் வியாபாரிகளிடம் இருந்து 3 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பூ மார்கெட்டில் உள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் உறுதி மொழி கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும் ஒரு சிலர் பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    அதை கண்டறிந்து அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து வருகிறோம். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் விற்பனையில் ஈடுபடுவர்கள் மற்றும் பயன்படுத்தும் வியாபாரிகளின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு உரிமமும் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×