search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895-ம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்.

    அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் தற்போது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

    ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்தவர்.

    அவருடைய பிறந்த நாளான (ஜனவரி 15) இன்றைய தினத்தை தமிழர்கள் விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

    தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறு களுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, “கர்னல் ஜான் பென்னிகுயிக்”கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான (ஜனவரி 15) இன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்.

    தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், ஒன்றிய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துக்களை தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல்ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×