search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக கவசம் (கோப்பு படம்)
    X
    முக கவசம் (கோப்பு படம்)

    சென்னையில் 8 நாளில் முக கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் அபராதம் வசூல்

    சென்னையில் முககவசம் அணியாத 18 ஆயிரத்து 819 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கடந்த ஒரு வாரமாக இந்த நடவடிக்கைகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

    கடந்த 8 நாளில் சென்னையில் முககவசம் அணியாத 18 ஆயிரத்து 819 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ‘‘பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றுபவர்களிடம் அரசின் உத்தரவின் பேரில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், எனவே பொது மக்கள் கண்டிப்பாக முககவசத்தை அணிய வேண்டும்’’ எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடந்த 7-ந்தேதியன்று 7,616 பேர் முககவசம் அணியாமல் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்து 20 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 8-ந்தேதியன்று 5,971 பேரிடம் ரூ.11 லட்சத்து 94 ஆயிரத்து 200-ம், 9-ந்தேதியன்று 3,174 பேரிடம் ரூ.6லட்சத்து 34 ஆயிரத்து 800-ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10-ந் தேதியன்று முககவசம் அணியாமல் 5,113 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 11-ந் தேதியன்று 5,195 பேரிடம் ரூ.10 லட்சத்து 39 ஆயிரமும்- 12-ந் தேதியன்று 5,640 பேரிடம் ரூ.11 லட்சத்து 28 ஆயிரமும், 13-ந் தேதியன்று 5,807 பேரிடம் ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 400-ம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையான நேற்றும் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நேற்று (14-ந்தேதி) 4,962 பேரிடம் ரூ.9 லட்சத்து 92 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.500-ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அபராத வசூல் தொகை இன்னும் தொடங்கப்பட வில்லை எனவும் பழைய முறைப்படி ரூ.200 வசூலிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் சில தினங்களில் முறைப்படியான உத்தரவு கிடைத்தவுடன் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

    Next Story
    ×