search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ராமேசுவரம் தங்கும் விடுதியில் பெண்ணை கொன்ற வாலிபர் கைது

    ராமேசுவரம் தங்கும் விடுதியில் தலையணையால் அமுக்கி பெண்ணை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    அரியானா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் யோகேஷ் (வயது 32). இவர் கடந்த 23-ந்தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுடன் ராமேசுவரம் வந்தார். அங்கு இருவரும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் 24-ந்தேதி மாலை அறையில் இருந்து வெளியே சென்ற யோகேஷ் திரும்பி வரவில்லை. அவர் தங்கி இருந்த அறை 2 நாட்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அந்த விடுதிக்கு சென்று யோகேஷ் தங்கி இருந்த அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவருடன் தங்கி இருந்த இளம்பெண் அரை நிர்வாண நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட அந்த இளம்பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஆனால் அவருடன் தங்கி இருந்த வாலிபரான யோகேஷ் தனது ஆதார் கார்டு நகல் மற்றும் செல்போன் எண்ணை விடுதியில் வழங்கி இருந்தார். அதனை கைப்பற்றி வாலிபர் யோகேசை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சுவரஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முக்கியமாக யோகேசின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற் கொண்டனர்.

    அதில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாநில போலீசாருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சுவரஜ் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநில போலீசார் யோகேசை கைது செய்தனர்.

    யோகேஷ் பிடிபட்ட தகவல் ராமேசுவரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து அழைத்துவர ராமேசுவரம் போலீசார் மகாராஷ்டிரா விரைந்துள்ளனர். தன்னுடன் தங்கி இருந்த பெண்ணை கொன்று விட்டு யோகேஷ் உடனடியாக வடமாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கிறார்.

    அவரது செல்போனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தனர். அதன் மூலமாகவே யோகேசின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்ததால் அந்த மாநில போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    யோகேஷ் கொலை செய்த இளம்பெண் யார்? என்பது இதுவரை தெரியவில்லை. மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள அவரை இங்கு அழைத்து வந்து விசாரித்த பிறகே அந்த இளம்பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவரும்.

    Next Story
    ×