search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தங்கமணியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் ஆகும். இங்கு அவர் தன்னுடைய பூர்வீக குடும்ப வீட்டில் வசித்து வருகிறார். அவர், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

    அதன் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. எந்த தொழிலும் செய்யாத நிலையில் தங்கமணி மனைவி வருமான வரி கட்டியது எப்படி எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி எழுப்பியது.

    இதையடுத்து கோவிந்தம்பாளையம் பகுதியில் தங்கமணியின் வீட்டில் இன்று காலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தலைமையில் 15 பேர் கொண்ட குழு வந்தது. அப்போது வீட்டில் தங்கமணி மட்டும் இருந்தார். போலீசார், அவரிடம் நாங்கள் லஞ்ச ஓழிப்பு துறையில் இருந்து வந்து இருக்கிறோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, தங்கமணி தனது வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். தொடர்ந்து, போலீசார் வீட்டின் முன்பக்கம் உள்ள மெயின் கேட்டை பூட்டினர். வெளியில் இருந்து யாரையும் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

    தனித்தனி குழுவாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், வீட்டிற்குள் சோதனை நடத்தி வருகிறார்கள். பூஜை அறை, ஹால், சமையல் அறை, வி.ஐ.பி.களுடன் ஆலோசனை நடத்தும் அறை, வீட்டின் மேல்தளம், படுக்கை அறை போன்றவற்றில் பணம், நகை, மற்றும் சொத்து ஆவணங்கள் உள்பட இதர ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினார்கள்.

    மேலும் குடிநீர் தொட்டி, மொட்டைமாடி, புத்தகம் வைத்திருக்கும் அலமாரி, பீரோ, மெத்தை, கட்டில் உள்ள அறை, பாத்திரங்கள், சமையல் பொருட்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இப்படி வீடு முழுவதும் சல்லடை போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    சேலம் நெடுஞ்சாலைநகர் ராஜாபுரம் பகுதியில் தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு உள்ளது. இந்த வீட்டில் திருப்பூரை சேர்ந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் இன்று காலை 6.30 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர். பின்னர் வீட்டின் ஒவ்வொரு அறையையும் சோதனை செய்தனர்.

    சேலம் ஜங்சனில் அஸ்வா பார்க் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். இந்த ஓட்டல் உரிமையாளர் குழந்தை வேலின் வீடு சேலம் குரங்குசாவடியில் உள்ளது. அவரது வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். குழந்தை வேல் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சேலம் மரவனேரியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதுப்பாளையம் காட்டூரில் உள்ள அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் வீட்டில் காஞ்சீபுரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள். இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்.

    தற்போது இவர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னராக உள்ளார். இவரது மனைவி தனலட்சுமி பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ளார். இவர்களது வீட்டில் நடந்த சோதனையின்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது. வெளி ஆட்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நாமக்கல்லில் நல்லி பாளையத்தில் உள்ள பி.எஸ்.டி. நிறு வனம், தங்கமணியின் நண்பர் பெரியப்பட்டியில் ஸ்ரீதேவி ஹேச்சரீஸ் மோகன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கட்டிட பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அது தொடர்பான விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சேகரித்தனர்.

    நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார் வீடு பரமத்திவேலூர் அருகே உள்ள வெங்கரையில் உள்ளது. இவரது வீட்டுக்கும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    சேலம் வீடு

    வேலூர் மாவட்டம் காட் பாடி கல்புதூரில் சீனிவாசன் என்பவரது வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளா கத்தில் தங்கமணிக்கு சொந் தமான கட்டுமான நிறுவன அலுவலகம் இருந்தது. இதையடுத்து இந்த வணிக வளா கத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

    கட்டுமான பணிகள் நடந் தது தொடர்பான விவரங்களை அவர்கள் சேகரித்தனர்.

    கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் அருகே பாலத் துறையை அடுத்த கூழாக் கவுண்டன் புதூரில் தங்கமணி யின் உறவினர் வசந்தி வசித்து வருகிறார். இன்று காலை 6.30 மணியில் இருந்து கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 பேர் வசந்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வசந்தியின் சகோதரர் வேலுச்சாமி என் பவருக்கு சொந்தமான கோவை சாலையில் அமைந் துள்ள வீடு, வணிக வளாகம், பெட்ரோல் பங்க் மற்றும் ஜெயஸ்ரீ செராமிக்ஸ் நிறு வனம் ஆகிய இடங்களிலும் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் முனியப்பன் கோவில் வீதியில் சிவானந்தம் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் 5-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

    இதேபோல் ஈரோடு பண்ணை நகரில் உள்ள சிவானந்தத்தின் தம்பி செந்தில்நாதன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. இதேபோல் பாரி வீதியில் உள்ள உறவினர் வீடு, கணபதி நகரில் உள்ள உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பவானி, சித்தோடு உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகள் உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.

    Next Story
    ×