search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கமணி"

    • தயவுசெய்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    • மக்களை பாதுகாக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று தொழில்துறை, சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்க மணி (அ.தி.மு.க.) பேசியதாவது:-

    தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாதான் போர்டு தொழிற்சாலை கொண்டு வந்தார். நோக்கியா கம்பெனி வருவதற்கு வித்திட்டவரும் அம்மாதான். எந்த ஆட்சியாக இருந்தாலும் தொழில் முதலீடு வந்தால்தான் தொழில் வளம் பெருகும்.

    எங்கள் ஆட்சியின் போது 2-வது தொழில் முதலீடு மாநாட்டை எடப்பாடியார் நடத்தினார். சீக்கிரம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக கூறி உள்ளீர்கள்.

    புரட்சித்தலைவி அம்மா 1992-ம் ஆண்டில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வந்து தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அனுமதி பெற்றுத் தந்தார். எடப்பாடியார் ஆட்சியிலும் ஒரு மாதத்தில் அனுமதி கிடைத்தது. ஆனால் இன்று எனக்கு கிடைத்த தகவல் படி இதில் காலதாமதம் ஆவதாக தெரிகிறது. இதை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

    நோக்கியா கம்பெனி மிக சிறப்பாக செயல்பட்ட நிலையில் சட்டத்தை மாற்றிய காரணத்தால் அந்த ஆலை மூடப்பட்டது. இதேபோல் தென் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையை பாதுகாக்கும் கடமை இந்த அரசுக்கு உள்ளது.

    புரட்சித்தலைவி அம்மாவை தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழ்நாட்டில் தொழில் துறை வளர பாடுபட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால்தான் பலர் தொழில் தொடங்க முன் வருவார்கள். மின் கட்டண உயர்வால் இன்றைக்கு சிறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது.

    கோவை பகுதிகளில் தொழிற்சாலை நடத்துபவர் பலரிடம் அமைச்சர்கள் கேட்டுப்பார்த்தால் தெரியும்.

    நீங்கள் தந்துள்ள கொள்கை விளக்க குறிப்பில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழில் வளம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டு உள்ளீர்கள். இன்றைக்கு செங்கல்சூளைக்கு கூட மணல் எடுக்க முடியாத நிலை உள்ளது. எங்கள் ஆட்சியில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிக அளவு டெக்ஸ்டைல் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கு இது தவிர்க்க முடியாத தொழில். இந்த சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆற்றில் மாசு கலப்பதை தடுக்க எடப்பாடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தார்.

    இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் புற்று நோய் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட எனது சகோதரி புற்று நோயால் உயிரிழந்துள்ளார்.

    (இவ்வாறு பேசும்போது அவரது குரல் தழுதழுத்தது...கண்ணீர் மல்க அவர் தொடர்ந்து பேசினார்).

    இந்த அரசுக்கு நான் வேண்டுகோள் வைப்பது தயவுசெய்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும். சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையத்தை அரசே நடத்தினால்தான் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். இப்போது ஏற்படும் 10 இறப்புகளில் ஒரு இறப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது.

    எனவே மக்களை பாதுகாக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தங்கமணி பேசினார்.

    • மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது.
    • மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டில் இருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை.

    எனவே இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தறி, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மின்கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக்கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள்.

    தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து, அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதம் குறைத்துள்ளோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26 ஆயிரம் புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

    மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.

    தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32 ஆயிரம் மெகாவாட்டாகும். இதையடுத்த 10 ஆண்டுகளில் 64 ஆயிரம் என உயர்த்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.

    மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. அ.தி.மு.க. ஈ.பி.எஸ். அணி பா.ஜ.க.வின் பி டீமாக செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சிக்கிய சொத்து ஆவணங்கள் குறித்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
    • தங்கமணியின் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல்:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராகவும், தொழில் துறை அமைச்சராகவும் பின்னர் மின்சார துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் தங்கமணி. இவர் தற்போது குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சென்னை அருகே பனையூரில் உள்ள பங்களா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், அவரது ஆடிட்டர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையில் 2.38 கோடி ரூபாய் ரொக்கம், 1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, கணக்கில் வராத, 2.16 கோடி ரூபாய், மொபைல் போன்கள், பல வங்கிகளின் 'லாக்கர்' சாவிகள், கணினி 'ஹார்டு டிஸ்க்'குகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்களை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சரிபார்த்து வருகின்றனர். இதில் அவரது வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்கள், அதற்கான ஆவணங்கள் குறித்தும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    மேலும் சோதனையின்போது சிக்கிய சொத்து ஆவணங்கள் குறித்தும் மதிப்பீடு செய்து வருகின்றனர். இதையொட்டி தங்கமணியின் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

    ×