search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி- வாலிபர் கைது

    முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 60). கூலி தொழிலாளியான இவர், தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள குழாயில் குடத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு சாலையை கடந்துள்ளார். அப்போது முத்துப்பேட்டையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பக்கிரிசாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பக்கிரிசாமி பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தார்..

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பக்கிரிசாமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி செல்லமணி கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பக்கிரிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாகை அம்பிகா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×