search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி
    X
    அமைச்சர் செந்தில் பாலாஜி

    மின்தடை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

    மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்-அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு மற்றும் கோடைகாலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத், மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம், நிதி இயக்குனர்கள், தொழில்நுட்ப இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின்வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் சிறப்பு கவனம் செலுத்தி தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்வரும் 31.05.2021 வரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின்போது அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள் குறிப்பாக மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மழை காலத்தில் தற்காலிக மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்-அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும்.

    அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார். கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி பணியாற்றிடவும், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் சானிடைசர் வழங்கிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×