search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் தயார் நிலையில் உள்ள கொரோனா ரெயில் பெட்டி.
    X
    மதுரையில் தயார் நிலையில் உள்ள கொரோனா ரெயில் பெட்டி.

    மதுரை ரெயில் நிலையத்தில் 31 கொரோனா பெட்டிகள் தயார்

    மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டு உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் செய்வது அறியாமல் திகைத்து வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டு உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் செய்வது அறியாமல் திகைத்து வருகிறது.

    இந்த நிலையில் சமயநல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 31 கொரோனா ரெயில் பெட்டிகள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோது வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் இவை தயாரிக்கப்பட்டன.

    கொரோனா ரெயில் பெட்டிகளில் ஒரு ஜன்னல் மூடப்பட்டு, மற்றொரு ஜன்னல் திறக்கப்பட்டு உள்ளது. இவற்றில் மருத்துவ உபகரணங்கள் பொருத்த வசதியாக, 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் உள்ளன.

    ஒரு பெட்டிக்கு 4 கழிவறைகள், 2 குளியல் அறைகள் உள்ளன. ஒவ்வொரு குளியல் அறையிலும் தலா ஹேண்ட் ‌ஷவர், வாளி, கோப்பை ஆகியவை வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 4 பாட்டில்கள் வைக்கும் வகையில் ஹோல்டர்கள் உள்ளன.

    இது தவிர மருத்துவ ஆலோசனை அறை, மருந்து வைப்பறை, கேன்டீன் ஆகியவை இருக்கும் வகையில் கொரோனா ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு பெட்டியில் 18 படுக்கைகள் உண்டு. அந்த வகையில் மதுரை கொரோனா ரெயில் பெட்டிகளில் 533 படுக்கைகள் உள்ளன.

    இதுதொடர்பாக மதுரை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் ரெயில்வே கோட்டத்தின் பங்கு இன்றியமையாதது. மதுரை மாப்பாளையத்தில் 85 படுக்கை வசதிகளுடன் ரெயில்வே ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் இந்த ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு விட்டது. இங்கு தற்போது 85 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 31 ரெயில் பெட்டிகள் கடந்த ஆண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன. இவற்றில் நோயாளிகளுக்கு கடந்த ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த ரெயில் பெட்டிகள், சமயநல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    தற்போது மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்று உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை மீண்டும் மதுரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறும்போது, மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்தாலும், நோய் தொற்று குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இதுதவிர வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் கொரோனா ரெயில் பெட்டிகள் மீண்டும் மருத்துவ சேவையில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×