search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அ.தி.மு.க. 180 தொகுதிகளில் போட்டியிட புதிய வியூகம்

    அ.தி.மு.க. 180 இடங்களில் போட்டியிட முடிவு செய்து அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி வருகிறது.

    இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரான துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் கையெழுத்திட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று பா.ஜனதா கட்சியுடன் ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பா.ஜனதாவுக்கு 18 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தம் முடிந்ததும் அடுத்ததாக தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

    தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு வருகிறது.

    ஆனாலும் அ.தி.மு.க. 180 இடங்களில் போட்டியிட முடிவு செய்து அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது பற்றி தொடர்ந்து பேசி வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டுமானால் 180 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் தனி மெஜாரிட்டிக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. கருதுகிறது.

    அதன் அடிப்படையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விடும் என எதிர்பார்ப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    பா.ம.க.வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் வேகமாக இறுதி செய்யப்பட்டு வருகின்றன. பா.ஜனதா மற்றும் தே.மு.தி.க.வுடன் உடன்பாடு எட்டிய ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அநேகமாக 5-ந்தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×