search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திண்டுக்கல் அருகே மின்வாரிய பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

    திண்டுக்கல் அருகே மின்வாரிய பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத பழைய கட்டிடம் உள்ளது. இங்கு பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இருக்காது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துபோனார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வி மற்றும் போலீசார், சுவர் இடிந்து விழுந்ததில் பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியதில் அந்த நபரின் தலை, முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×