search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    மூதாட்டியை கட்டிப்போட்டு 10 பவுன் நகை-பணம் கொள்ளை

    ஆரணியில் வீட்டில் மூதாட்டியை கட்டிப்போட்டு 10 பவுன் நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன் (வயது 42). திருமணமான இவருக்கு நதியா என்ற மனைவியும், ரம்யா (13), ஸ்ரீதர்ஷன் (12) என்ற மகனும், மகளும் உள்ளனர்.

    இவருடன் தாயார் சாரதா (80) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, கோவிந்தன் தனது மனைவியுடன் சோழவரம் அருகே உள்ள பெருங்காவூர் கிராமத்திற்கு சென்று இருந்தார். அப்போது, வீட்டில் அவரது தாயார் சாரதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூதாட்டி சாரதாவை கட்டிப்போட்டு, பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதையடுத்து கொள்ளையர்கள் சென்றவுடன் மூதாட்டி கூக்குரலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து அவர், நடந்தவற்றை அவர்களிடம் கூறினார்.

    இது குறித்து அக்கம்பக்கத்தினர் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×