search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சேலத்தில் மருந்து கடையில் பணம் திருட்டு

    சேலத்தில் மருந்து கடையில் பணத்தை திருடிச் சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் 5 ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு மருந்து கடை உள்ளது. நேற்று முன்தினம் வழக்கமாக வேலை முடிந்து இரவு ஊழியர்கள் கடையின் வெளிப்புற ஷட்டரை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை ஊழியர்கள் சிலர் வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.13 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கடை மேலாளர் ஞானவேல் குமார் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் மருந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.

    அதேபோன்று 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவிலும் அதே 3 பேர் வேகமாக செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடையில் பணம் திருடிச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் 5 ரோடு பகுதியில் மருந்து கடையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள வணிகர்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×