search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட நபர்கள்
    X
    கைது செய்யப்பட்ட நபர்கள்

    பணத்தகராறில் வடமாநில தொழிலாளி கொலை- 2 பேர் கைது

    கோவையில் பணத்தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவையை அடுத்த சேரன்மாநகர் பகுதியில் தனியார் கிரானைட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த லலித்குமார் (வயது 42) என்பவர் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அருமன் (25), ராம்கிஷோர் (22) ஆகியோர் தொழிலாளியாகவும், நாமக் கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவர் டிரைவராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் சட்டைப்பையில் இருந்த ரூ.400 மாயமானது. அதை லலித்குமார் எடுத்துவிட்டதாக செந்தில்குமார் கூறிவந்தார். அதை லலித்குமார் மறுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் செந்தில்குமார், லலித்குமார், அருமன் மற்றும் ராம்கிஷோர் ஆகியோர் மது அருந்தினர். அப்போது செந்தில்குமார் தனது பணம் காணாமல் போனது குறித்து லலித்குமாரிடம் கேட்டு மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், அருமன் மற்றும் ராம்கிஷோர் ஆகியோருடன் சேர்ந்து லலித்குமாரை பலமாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த லலித்குமார் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லலித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருமன், ராம்கிஷோர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×