search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள தென்மாவட்டங்கள்

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள தென்மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி 29-ந் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்தநிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான நிலை இல்லை. 30-ந்தேதிக்கு மேல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி தமிழகத்தையொட்டி உருவாகியுள்ளது.

    இதனால் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியா குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல், புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்குள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தற்போது வடக்கில் இருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் சென்னையில் சற்று பனி ஏற்படுகிறது.

    கிழக்கு பகுதியில் இருந்து காற்று அதிகம் வீசினால் தான் அதிகமழை கிடைக்கும். அதனால் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×