search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேங்கிக்கால் குறிஞ்சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள காட்சி.
    X
    வேங்கிக்கால் குறிஞ்சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள காட்சி.

    திருவண்ணாமலையில் இடி மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை

    திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 105.6 மில்லிமீட்டர் மழை பதிவானது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    தாமரை நகர், வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, தேவனந்தல் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. திருவண்ணாமலையில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான வேங்கிக்கால் பெரிய ஏரி நிரம்பியது. அதேபோல் பல வருடங்களுக்கு பிறகு தேவனந்தல் ஏரியிலும் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகாத வகையில் திருவண்ணாமலை வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ந்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாய நீர் தேவைக்கு வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. தென்மேற்கு பருவமழையால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. ஆனால் நீர் நிலைகளில் சொல்லும் அளவிற்கு நீர் நிரம்பில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஏரி, குளங்களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது பெய்து வரும் மழையை நம்பி விவசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 105.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தண்டராம்பட்டு- 72.8, செங்கம்- 52.8, திருவண்ணாமலை- 48, சேத்துப்பட்டு- 2.

    கீழ்பென்னாத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. கீழ்பென்னாத்தூரில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் இந்தளவிற்கு மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக ஏரி, குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இனாம்காரியந்தல் ஏரி, கனபாபுரம் ஏரி ஆகியவை நிரம்பியது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் திருவண்ணாமலை மலையில் இருந்து வந்த தண்ணீர் புகுந்தது. பாதி வீடு முழ்கும் அளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆசிரம பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அங்கிருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்தன.

    இதேபோல் அடிஅண்ணாமலை காலனிக்குள் 2 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை தாசில்தார் வெங்கடேசன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே.எம்.பழனி மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் தண்ணீர் புகாத வகையில் தற்காலிக கால்வாய் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்

    மின்னல் தாக்கியதில் கொளக்கரவாடியில் முனியம்மாள் என்பவருக்கு சொந்தமான மாடும், கனபாபுரத்தில் 2 மாடுகளும் இறந்தன. ஓட்டு வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது.
    Next Story
    ×