search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    மாணவிகளுக்கு காதல் வலை: வாட்ஸ் அப்-பில் பரவும் தகவலால் பரபரப்பு

    மதுரையில் மாணவிகளுக்கு காதல் வலை விரிக்கும் கும்பல் குறித்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

    மதுரை நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை குறிவைத்து 3 பேர் கொண்ட கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது. அவர்கள் அந்த பகுதியில் நடத்தி வரும் கடைகள் மூலம் மாணவிகளிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செல்போன் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி காதல் வலை விரிப்பதாகவும் அதில் சிக்கும் மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சமூக விரோத செயல்களை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 3 பேரின் பெயர், அவர்களது செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் குறித்து மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் சிலரும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மாணவிகள் மீதான குற்றப்புகாரில் சிக்கியுள்ள 3 பேரும் தொழில் போட்டி காரணமாக இதுபோன்று தவறான தகவலை சிலர் பரப்பி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே மாணவிகள் இந்த 3 நபர்கள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மதுரை நகர போலீஸ் துணை கமி‌ஷனர் கார்த்திக் (94981 29498) மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் ஹேமமாலா (83000 17920), சீனிவாசன் (97905-99332) ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் புகார்தாரர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவிகளுக்கு காதல் வலை விரிக்கும் இந்த நபர்கள் குறித்து இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பகுதில் ரகசியமான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நரிமேடு பகுதியில் பரவியுள்ள இந்த தகவல் மதுரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×