search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    முக்கூடலில் கல்லூரி மாணவி மர்ம மரணம்

    முக்கூடலில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காதல் விவகாரத்தில் கொன்றுவிட்டதாக தந்தை மீது மாணவியின் அக்கா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் தெற்கு ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55). இவர் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    செல்வகுமாரின் முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் அதே பகுதியை சேர்ந்த சீதா என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு செரீனாமதி (18) மற்றும் செலீனாமதி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    செல்வகுமார் தனது மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீதா அவருடன் விவகாரத்து பெற்றுக்கொண்டு தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவரது 2 மகள்களும் செல்வகுமாருடன் வசித்து வந்தனர்.

    மூத்தமகள் செரீனாமதி தொலைதூர கல்வி மூலம் பி.ஏ. பட்டபடிப்பு படித்து வந்தார். அவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதனை செல்வகுமார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கடந்த 22-ந் தேதி செரீனாமதி வி‌ஷம் குடித்து விட்டார் என்று கூறி அவரது தந்தை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதாக  2-வது மகள் செலீனாமதி முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், தன்னுடைய அக்காவை தந்தை அடித்துக்கொன்றதாக தெரிவித்துள்ளார்.

    செரீனாமதியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்களும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செரீனாமதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தந்தை தாக்கியதில் இறந்தாரா? என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே செரீனாமதி எப்படி இறந்தார் என்பது தெரியவரும். ஆகவே போலீசார் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    மாணவி மர்மமான முறையில் இறந்திருப்பது முக்கூடல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×