search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா பகுதி நிலங்கள்
    X
    டெல்டா பகுதி நிலங்கள்

    காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்

    காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்கள் பாதுகாப்புக்கான சட்ட மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
    சென்னை:

    காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்களின் பாதுகாப்புக்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். 

    இந்த மசோதாவின்படி துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு, அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு எடுத்தல், பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    இந்த தடை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதற்கும், கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார்கோவில், மேல் புவனகிரி, ப.கீரபாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.

    வேளாண் மண்டல சட்டம் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர், இப்பகுதியில் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவை இந்த சட்டத்தினால் பாதிக்கப்படாது. 

    இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு பின்வருமாறு உறுப்பினர்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பு’ என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப்படுகிறது.

    முதல்-அமைச்சரை தலைவராக கொண்டு, துணை முதல்-அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் இந்த அதிகார அமைப்பில் இடம் பெறுவார்கள்.

    இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படுகிறது.

    இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகளுக்கு மிகாமல், ஆறு மாதங்களுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்படும். 
    Next Story
    ×