search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வில்லியனூர் அருகே வடிசாராய ஆலை ஊழியர் வெட்டிக்கொல்ல முயற்சி

    வில்லியனூர் அருகே முன்விரோதத்தால் சக ஊழியர்கள் வடிசாரய ஆலை ஊழியரை வெட்டிக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள ஆரியப்பாளையம் காலனியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களது மகன் வேல்முருகன் (வயது28). இவர் அங்குள்ள வடிசாராய ஆலையில் வேலைசெய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த சபரி (20), பூவரசன் (20)ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி, பூவரசன் இருவரும் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை வேல்முருகன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் சபரி, பூவரசன் ஆகிய இருவரையும் தாக்கி உள்ளார். இதனால் வேல்முருகன் மீது அவர்கள் இருவரும் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

    இதேபோல் அதே ஆலையில் சக்திவேல் என்பவருடனும் வேல்முருகனுக்கு தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு வேல்முருகன் தனது வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார். இதனையறிந்த சபரி மற்றும் பூவரசன் ஆகியோர் வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டு விழுந்தது. இதனை தடுக்க முயன்ற போது அவரது கைவிரல்களிலும் வெட்டு விழுந்ததில் விரல்கள் துண்டானது.

    இவரது அலறல் சத்தம் கேட்டு வேல்முருகனின் குடும்பத்தினர் வருவதை அறிந்த அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர்வேல்முருகனை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட வேல்முருகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொலை தொடர்பாக மேற்குபகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து கொலையில் சம்பந்தப்பட்ட சபரி மற்றும் பூவரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் கொலை சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரியும் முக்கிய குற்றவாளியான சக்தி வேலை கைது செய்யக்கோரியும் வேல்முருகனின் உறவினர்கள் கொம்யூன் பஞ்சாயத்து அருகே விழுப்புரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேற்குபகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவர் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×