search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    சாத்தான்குளம் அருகே கோவில் கொடைவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி

    சாத்தான்குளம் அருகே கோவில் கொடைவிழாவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 45). இவரது மனைவி வனிதா(40). இவர்களுக்கு சண்முகப்ரியா (8) என்ற மகள் உள்ளார். கிருஷ்ண குமார் தனது மனைவியுடன் கோவையில் தங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். சிறுமி சண்முக பிரியா முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள சக்தி கோவிலில் கொடைவிழா நடைபெற இருந்தது. இதற்காக நேற்று இரவு கோவிலில் மைக் செட், ஒலிப்பெருக்கி உள்ளிட்டவைகளை கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. மின் வயர்கள் தரையில் போடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமி சண்முகப்ரியா எதிர் பாராதவிதமாக அங்கு கிடந்த மின் வயரில் மிதித்துவிட்டார். இதில் சண்முகப்ரியா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே கோவில் கொடைக்கு கோவையில் இருந்து வந்த அவரது தாயார் இந்த சம்பவம் கேட்டு கதறி அழுதார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வின், சிறுமியின் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கவனக்குறைவாக மின் வயர்களை தரையில் போட்டிருந்த மைக்செட் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த மோசை(58) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கிருஷ்ணகுமார்-வனிதா தம்பதிக்கு சண்முகப்ரியா ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×