search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    தஞ்சையில் குடி போதை தகராறில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை

    குடி போதை தகராறில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் காளியம்மன் கோவில் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36) கூலிதொழிலாளி. இவர் வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செபாஸ்டியன் (26), தில்லை நகரை சேர்ந்த சதீஷ்குமார் (26) ஆகியோருடன் நேற்று இரவு மதுபான கடைக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் மதுவாங்கி கொண்டு வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்கள் அருகே வடக்குவாசலை சேர்ந்த மற்றொரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர் சக்திவேல், செபாஸ்டியன், சதீஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த தாக்குதலில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். செபாஸ்டியன், சதீஷ்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்த செபாஸ்டியன், சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை செபாஸ்டியன் இறந்தார். சதீஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வடக்குவாசலை சேர்ந்த சூர்யா, வெங்கடேசன், செல்வகுமார், சுந்தர் ஆகிய 4 பேரை பிடித்து அவர்களை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வடக்குவாசலை சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது குடிபோதையில் நடந்த தகராறில் கொலை நடந்ததா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து வடக்குவாசல் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×