search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பூதப்பாண்டி அருகே காண்டிராக்டர் கொலையில் வாலிபர் சிக்கினார்

    பூதப்பாண்டி அருகே காண்டிராக்டர் கொலையில் தொடர்புடைய வாலிபர் சிக்கி உள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அம்பலதுருத்தி பகுதியைச் சேர்ந்தவர் தேவானந்த்(வயது21). இவர் தெரிசனங்கோப்பு அருகே உள்ள உவாட்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிய வந்ததும், பெண்ணின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    அந்த பெண்ணை சந்திக்கக் கூடாது என்று தேவானந்தை அவர்கள் கண்டித்தனர். ஆனாலும் தேவானந்த் தனது காதலை கைவிடாமல் அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்.

    இந்த நிலையில் தேவானந்த் தனது காதலியை சந்திப்பதற்காக அவரது ஊருக்குச் சென்றபோது அந்த பெண்ணின் உறவினர்களான ஆனந்த்(42), அருள்தாஸ்(40) ஆகியோர் அவரை பார்த்து விட்டனர்.

    அவர்கள் இருவரும் தேவானந்தை கண்டித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தேவானந்தை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால் தேவானந்துக்கு அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை தாக்கியதால் அவர்களை பழிவாங்கும் எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆனந்த் மற்றும் அருள்தாஸ் ஆகிய 2 பேரும் அம்பலதுருத்தி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனது நண்பர்கள் பிரவின், முத்து, அருள்குமரன் ஆகியோ ருடன் அங்கு வந்த தேவானந்த் அவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். அவர்களை பழிவாங்க அது தான் சரியான நேரம் என முடிவு செய்தார்.

    தேவானந்தும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து ஆனந்தையும், அருள்தாசையும் தாக்கினார்கள். அவர்களுக்கு சரமாரியாக கத்தி குத்தும் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்த் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பலியான ஆனந்த் காண்டிராக்டர் ஆவார்.

    அருள்தாசுக்கு புத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொலை பற்றி பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேவானந்த் உள்பட 4 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் பிடியில் இறச்சகுளம் அம்பலதுருதியைச் சேர்ந்த அருள்குமரன்(25) என்பவர் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலையில் தொடர்புடைய தேவானந்த், பிரவின், முத்து ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×