search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வல்லம் அருகே திருமணமாகி 2 வருடத்தில் இளம்பெண் மர்ம மரணம்

    வல்லம் அருகே திருமணமாகி 2 வருடத்தில் இளம்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்து உள்ள வல்லம் அருகே உள்ள குருங்குளம் தெற்கு அம்பலக்கார தெருவை சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் செல்வநிதி (வயது 34). இவருக்கும் தஞ்சையை அடுத்து உள்ள கண்டிதம்பட்டு அருகே உள்ள உச்சிமான் சோலையை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகள் சுகன்யா (26) வுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் சுகன்யா அவருடைய கணவர் செல்வநிதியுடன் குருங்குளத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    செல்வநிதி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று செல்வநிதி வெளியில் சென்றிருந்ததாகவும் மதியம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சுகன்யா தூக்கு மாட்டி கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வல்லம் போலீசார் குருங்குளம் சென்று சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகன்யாவின் தந்தை கலியபெருமாள் சாவில் சந்தேகம் இருப்பதாக வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஒ வேலுமணி மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×